மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்................

 மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்................

அதிபர் - ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்கள் இன்று (12) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

'பிள்ளைகளின் கல்வி உரிமையை வழங்கு!', 'இலவசக் கல்வி உரிமையை அழிக்கும் புதிய கல்விக் கொள்கை கட்டமைப்பை உடனடியாக மீளப்பெறு', 'இலவசக் கல்வியின் தரத்தை உறுதி செய்', 'ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டின் 2/3 பங்கை கொடு', 'ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கு', 'கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரி', 'அதிபர்கள், நிர்வாக அதிகாரிகள் செயற்பாடுகளில் அரசியல் தலையீட்டை நிறுத்து' எனும் வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை இதன் போது ஏந்தியிருந்தனர்.

அதேவேளை, 'செய் செய் இல்லாமல் செய்... ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை', 'அடுத்த ஆண்டு வழங்குவோம் என்ற பொய்யான வாக்குறுதி எங்களுக்கு வேண்டாம்... கொடு கொடு எங்களுக்கு கொடு', 'புத்தகங்கள் விலை அதிகம் வானளவு உயர்ந்து போச்சு ஆட்சியாளர்கள் தின்ட நாட்டில் பிள்ளை பலியா?', 'அடுத்த பட்ஜெட்டில் வழங்குவோம் என்று அமைச்சர் சொன்ன மீதிப் பகுதி பட்ஜெட்டில் இல்லை ஒரு சத்தம்... ஆசிரியர் அதிபர் ஊதியம் பற்றி...', 'பாடசாலைகளின் பராமரிப்பை பெற்றோர் மீது திணித்துவிட்டு பள்ளிகளை மூடும் திட்டத்தை உடன் நிறுத்து', 'கல்விகளை விற்க நினைக்கும் பள்ளிகளுக்கு விலை பேசும் ரணிலின் கொள்கைகளை கிழித்தெறிவோம் ஒன்று சேர்ந்து' எனும் கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments