மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் நடைபவனி........

 மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் நடைபவனி........

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சமூகம், கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தும் "மைக் வோக்" நடைபவனியானது (30) சனிக்கிழமை கல்லூரி வளாகத்திலிருந்து ஆரம்பமாகியது.
இப் நடைபவனியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரும், புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கப் போஷகருமான யோசப் பொன்னையா ஆண்டகை ஆரம்பித்து வைத்தார்.
இப்பவனியானது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன், நடை பவனி கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி திருமலை வீதி வழியாக, தாண்டவன்வெளி வரை சென்று அரசடியை அடைந்து அங்கிருந்து மீண்டும் கல்லூரியை சென்றடைந்தது.
கல்லூரியின் பெருமைகளையும் அதன் சரித்திரத்தையும், சாதனைகளையும் எடுத்துக் காட்டும் அலங்கார ஊர்திகள், பதாதைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்ட "மைக் வோக்" நடைபவனி 2023 மூலம் திரும்பவும் ஒரு முறை மட்டக்களப்பு சமூகத்திற்கும், முழு இலங்கைக்கும் புனித மிக்கேல் கல்லூரியின் அருமை பெருமைகளை பறைசாற்றும் முகமாகவே இந்நிகழ்வினை பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் ஆரம்பத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட மூன்று முதுசங்கள் பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டதுடன், பாடசாலையின் அதிபர் அன்டன் பெணடிக் ஜோசப், அருட்தந்தையர்கள், பாடசாலையின் உப அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.









Comments