களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தை இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் மஸ்தான்

 களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தை இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் மஸ்தான்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து அதன் மூலம் வியாபாரிகள் நன்மையடைவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு இதுவரையில் திறக்கப்படாத நிலையில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வரவேற்கப்பட்டதுடன் பொருளாதார நிலையத்தினையும் பார்வையிட்டார்.

2017ஆம்ஆண்டு சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் 50 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கியதாக சகல வசதிகளையும் கொண்டதாக இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பெரும் உற்பத்தி கிராமமாக கருதப்படும் களுதாவளை பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள உற்பத்தியாளர்களின் நன்மை கருதி குறித்த பொருளாதார நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.

இதுவரையில் குறித்த பொருளாதார நிலையம் திறக்கப்படாத நிலையில் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்த நிலையில்  இராஜாங்க அமைச்சர் அங்கு விஜயம் செய்து பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.


Comments