பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டலை வழங்கும் சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலம்!!

 பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டலை வழங்கும் சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலம்!!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டலை வழங்கும் சுற்றாடல் தின விழிப்புணர்வு மற்றும் ஊர்வலம் (05)ம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை, மண்முனை வடக்கு பிரதேச செயலகம், மட்டக்களப்பு மாநகர சபை ஆகியன இணைந்து Child fund மற்றும் AU Lanka ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் நிதி அனுசரனையில் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு கோட்டைப் பூங்காவில் இடம்பெற்று அங்கிருந்து மட்டக்களப்பு மணிக்கூட்டுக்கோபுரம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
"பிளாஸ்டிக் மூலம் ஏற்படக்கூடிய மாசினை தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் AU Lanka நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர், Child Fund நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் விஜயபால சின்னத்தம்பி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, 231 வது இராணுவ படைப்பிரிவின் உயரதிகாரிகள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்களுக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் கே.ராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், "இயற்கையை நாம் நேசிப்போம் - இயற்கை எம்மை நேசிக்கும்" எனும் வகையிலான ஆலோசனையினை அதிதிகள் தமது உரையினூடாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டதுடன், நான்கு குழுக்களாக பிரிந்து கோட்டை பூங்கா, கல்லடி கடற்கரை, லேடி மெனிங் வீதி மற்றும் காந்தி பூங்காவை அண்மித்த பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிகழ்வுகளில் பிரதேச சுற்றாடல் முன்னோடி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மண்முனை மேற்கு - வவுணதீவு இளைஞர் யுவதிகள், இராணுவ தரப்பினர் உள்ளிட்ட இயற்கையை நேசிக்கும் பலரும் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.








Comments