மட்டக்களப்பில் கோலாகலமாக இடம்பெற்ற சித்திரை வசந்தம் - 2023

 மட்டக்களப்பில் கோலாகலமாக இடம்பெற்ற சித்திரை வசந்தம் - 2023

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை பொலிஸ், இலங்கை இராணுவம், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து நடாத்திய சித்திரை வசந்தம் - 2023 (30) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளும், மாலை நேர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வானது காலை 6.30 மணியளிவில் காந்திப்பூங்காவில் இருந்து இருபாலாருக்குமான சைக்கிள் ஓட்டமும், மரதன் ஓட்டமும். காலை 8.30 மணிக்கு முகத்துவாரத்தில் இருந்து மட்டக்களப்பு நுழைவாயில் வரையிலான தோணி ஓட்டமும், நீச்சல் அஞ்சல் ஓட்டமும் (கலப்பு), பிற்பகல் 2 மணி தொடக்கம் வழுக்கு மரம் ஏறுதல், தலையணைச்சமர், முட்டி உடைத்தல் புதுவருட அழகன் மற்றும் அழகி போட்டி போன்ற சுவாரஸ்யம் நிறைந்த போட்டி நிகழ்வுகள் பார்ப்போரைக் கவர்ந்தன.
அத்தோடு உள்ளூர் வியாபார முயற்சியாளர்களின் கண்காட்சியும் விற்பனையும் வெபர் விளையாட்டு மைதானத்தில் பிரதம அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.
இதில் பாரம்பரிய உணவுக் கூடங்கள் மற்றும் உள்ளூர் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளின் கண்காட்சி மற்றும் விற்பனை கூடங்கள் என்பனவும் அமைக்கப்பட்டிருந்தன.
கிடுகு இழைத்தல், கோலம் போடுதல், சைக்கிள் மெதுவோட்டம் (50 வயதுக்கு மேல் ஆண்), யானைக்கு கண் வைத்தல், சாக்கோட்டம், பெண்களுக்கான தேங்காய் துருவுதல், தேசிக்காய் சமநிலை ஓட்டம், ஊசிக்கு நூல் கோர்த்தல், போத்தலில் நீர் நிரப்புதல், சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், பலூண் உடைத்தல், சங்கீதக் கதிரை (பெண் உத்தியோகத்தர்கள்), தொப்பி மாற்றுதல் (ஆண் உத்தியோகத்தர்கள்), கயிறு இழுத்தல் - பொலிஸ் மற்றும் இராணுவம் (ஆண்) பொலிஸ் மற்றும் மாவட்ட செயலகம் (பெண்), கிராமியப்பாடல் (35 வயதுக்கு மேற்பட்டோர்), புத்தாண்டு அழகன், அழகி போட்டிகள் போன்றவை மாலை நேர விளையாட்டுக்களாக இடம்பெற்றதனைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வும் அதனைத் தொடர்ந்து மட்டுநகர் சுப்பர் சங்கீர்த் இசைக்குழுவின் பிரபல பாடகர் மகிந்தகுமார் உள்ளிட்ட கலைஞர்களின் பங்கேற்புடன் வழங்கிய அட்டகாசமான இசை நிகழ்ச்சி, வரவேற்பு நடனம், ஆடல், பாடல் என பல்வேறுபட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மாவட்ட செயலக சித்திரை வசந்தம் - 2023 நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெற்று நிறைவுற்றது.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதிமிக்க பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே.மகேசன், முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர்களான சீ.புண்ணியமூத்தி, எம்.உதயகுமார், 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (Dig) உஜித் என்.பீ.லியனகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் (மட்டக்களப்பு-I) எம்.ஏ.கே.பண்டார, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சரத்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக பிரதிநிதிகள், வர்த்தக பிரதிநிதிகள், கோட்டமுனை விளையாட்டு கழக பிரதிநிதிகள், உள்ளிட்ட சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவான போட்டியாளர்களும், பொதுமக்களும் கலந்து






































கொண்டனர்.

Comments