07. இலங்கை அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தமிழர் ஸ்ரீதரன் ஜெகநாதன்: இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழர்கள்...........

07. இலங்கை அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தமிழர்  ஸ்ரீதரன் ஜெகநாதன்: இலங்கை  கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழர்கள்........... 


இலங்கை கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட அழைக்கப்பட்ட முதல் தமிழன் தான் ஸ்ரீதரன் ஜெகநாதன் அவர்கள். இவர் 1951 யூலை மாதம் 11ம் திகதி பிறந்தார். இவரது பூர்வீகம் யாழ்ப்பாணத்தை சார்ந்ததாகவே காணப்படுவதாகவும், மாணிப்பாயுடன் கூடுதல் தொடர்புடையவராகவும் கூறப்படுகின்றது. இவர் 1982/83 காலப்பகுதியில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 04.03.1983ல் அறிமுகமானார், ஆனால் இவரால் அப் போட்டியில் விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்ற முடியவில்லை, இருந்த போதிலும்  இலங்கை அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள இவர், எதுவித விக்கெட்டுக்களையும் கைப்பற்ற முடியவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். இவரது இறுதி டெஸ்ட் போட்டியும் நியூசிலாந்து அணியுடனேயே 11.03.1983ல் முடிவடைந்தது மறுக்க முடியாத உண்மையாகும். 

பின்னர் 20.03.1983ல்  நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அப்போட்டியில் கூட இவரால் விக்கெட்டுக்களை கைப்பற்ற முடியவில்லை, பின்னர் இவர் 1987ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இணைந்து நடாத்திய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார். அவர் இலங்கையில் அணியில் இணைத்து அழைத்துச் செல்லப்பட்டார். 


இவ் உலக கிண்ண போட்டிகளில் மேற்கிந்திய தீவுக்கான போட்டியில் அப்போதைய சிறந்த துடுப்பாட்ட வீரரான ரிச்சி ரிச்சட்சனை ஆட்டமிழக்கச் செய்தார். அத்துடன் புனேவில் இடம் பெற்ற இங்கிலாந்துடனான போட்டியில் கூச் மற்றும் ரொபின்சன் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து தன் சிறந்த பெறுபேரான 45 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்கள் எனும் பெறுதியை தக்க வைத்துக் கொண்டார். இவ் உலக கிண்ண போட்டியில் மொத்தம் 05 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

29 முதல் தர போட்டிகளில் விளையாடிய இவர் 437 ஒட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளதுடன், அதிக படியாக 75 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார். பந்து வீச்சில் 49 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ள இவர் தன் சிறந்த பெறுபேறாக 34 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றி உள்ளதுடன் 14 பிடிகளையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இதன் பின் இவரது கிரிக்கெட் விளையாட்டு முடிவுக்கு வந்தது, பின்னர் மலேசிய தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றார். இதன் பின் தனது 44வது வயதில் 1996ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய கிரிக்கெட் அணியில் முதல் முதலில் விளையாடிய தமிழரான ஸ்ரீதரன் ஜெகநாதன் அவர்களை பாராட்டுகின்றோம்.



Comments