75வது சுதந்திரதின முன்னிட்டு மரநடுகை நிகழ்வு.......

  75வது சுதந்திரதின முன்னிட்டு மரநடுகை நிகழ்வு.......

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சத்துருக்கொன்டான், சின்ன சவுக்கடியில் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தால் மரநடுகை வேலைத்திட்டம் (04) நடைபெற்றது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு அதற்குரிய மரியாதை வழங்கப்பட்டதுடன் மரநடுகை வேலைத்திட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் மைதானத்திற்கு முன்பாக இம்மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது நீண்ட காலம் பயன் தரக் கூடிய மரமான இலுப்பை மரங்கள் தகுந்த பாதுகாப்புடன் நடப்பட்டுள்ளது. ஏதிர்காலத்தில்  மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மரமுந்திரிகை மரங்கள் இவ்விடத்தில் நடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இம்மரங்களை பராமரிக்கும் பொறுப்பு மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திடம் கையளிக்கப்ட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் முகாமைத்துவ பொறியியலாளர் எம்.துளசிதாசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது 50 இலுப்பை மரங்கள் நடப்படவுள்ளதாகவும், எதிர்காலத்தில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தால் பயன்தரும் பழக்கன்றான மரமுந்திரிகையும் நடப்படவுள்ளதாகவும் தெரிவித்து, மரங்களை நடுவது இலகுவான விடயம் ஆனால் அதை பராமரிக்க வேண்டும் இம்மரங்களை பராமரிப்பதற்கான முழு ஒத்துழைப்பையும் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் பொறுப்பேற்றுக் கொண்டது வரவேற்கத்தக்க விடயமாகவும், முன்னுதாரனமாகவும் இருப்பதாக தெரிவித்து அவர்களுக்கு பாராட்டுககளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர் E.சிவநாதன், S.அருள்மொழி, தலைவர் T.சஜிதராஜ், செயலாளர் V.வசந்தமோகன், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












Comments