உணவகத்துக்கு பூட்டு - ஓட்டமாவடியில் உணவகங்கள் மீது 3 நாள் தொடர் பரிசோதனை!!


உணவகங்களின் தரத்தைப்பேணும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான உணவு கிடைக்க வேண்டுமெனும் நோக்கிலும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் இறைச்சிக்கடைகள் மீது பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி எம்.எச்.எம்.தாரிக் அவர்கள் தலைமையில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நெளபர் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற மேற்படி பரிசோதனை நடவடிக்கையில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.கே.ஜெளபர், என்.எம்.ஷியாம், யூ.எல்.எம்.ஜின்னாஹ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது, சுத்தமில்லாமல் உணவகங்களில் பாவிக்கப்பட்ட உணவு பரிமாறும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சுகாதார அதிகாரி அலுவலகத்தின் வழிகாட்டுதல்களைப் பேணாத பேக்கரி மற்றும் உணவகம் சுகாதாரத்தரப்பினரால் மூடப்பட்டு கடும் எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது.
அதே நேரம், சுத்தமில்லாமல் உணவகங்களில் பாவிக்கப்பட்ட உணவு பரிமாறும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு சுகாதாரத் தரப்பினரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் தொடர்ச்சியாக இச்செயற்பாடு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Comments