சிவானந்தாவில் இடம்பெற்ற இலவச கண் வைத்தியமுகாம்........

 சிவானந்தாவில் இடம்பெற்ற இலவச கண் வைத்தியமுகாம்........



இலவச கண் பரிசோதனையும், கௌரவிப்பு நிகழ்வும் மட்டக்களப்பபு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில்  (25) திகதி நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 1991 ஆம் ஆண்டு கல்வி கற்று கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட சிவானந்தா விவேகானந்தா மாணவ ஒன்றியம் கல்லடி பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி மற்றும் அதனுடன் சார்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கையிலும் பங்களிப்பு செய்து வருகின்றது .

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்குகளும், கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சிறிகரநாதன் தலைமையிலான வைத்திய குழுவினரினால் தரம் இரண்டு மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாமினையும், சிவானந்தா மற்றும் விவேகானந்தா மாணவர்கள் கல்வி கற்ற காலங்களில் பணியாற்றிய அதிபர்கள், ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான கௌரவிப்பும், இலவச கண் பரிசோதனை முகாமும் சிவானந்தா மற்றும் விவேகானந்தா மாணவ ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சிறிகரநாதன் தலைமையில் மட்டக்களப்பபு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில்  நடைபெற்றது .

இதன் ஆரம்ப நிகழ்வானது கல்லடி இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் இருந்து அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக பாடசாலை பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் இராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தஜி மகராஜின் ஆசியுரையும், அதிதிகளின் சிறப்புரைகளுடன் கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் எஸ்.செல்வராஜா பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் .

தொடர்ந்து கல்லடி பிரதேசத்திற்குட்பட்ட 10 பாடசாலைகளின் தரம் இரண்டு மாணவர்களுக்கான கண் பரிசோதனைகள் நிகழ்த்தப்பாடடத்துடன், கண் பிரச்சினைகள் இனம் காணப்பட்ட மாணவர்களுக்கான மேலதிக சிகிச்சைக்கான பரிந்துரைகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ், சிவானந்தா, விவேகானந்தா பாடசாலைகளின் அதிபர்கள், சிவானந்தா பாடசாலை பழைய மாணவ சங்க தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.வாசுதேவன், வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப்பணிப்பாளர் ஹரிகரராஜ், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி மற்றும் சிவானந்தா, விவேகானந்தா மாணவ ஒன்றிய உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என  பலரும் இதன் போது கலந்துகொண்டனர்.












Comments