06. கொழும்பு ரோயல் கல்லூரிக்கே தலைவரான காசிப்பிள்ளை, இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழர்கள்...........

 06. கொழும்பு ரோயல் கல்லூரிக்கே தலைவரான காசிப்பிள்ளை, இலங்கை  கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழர்கள்........... 

மகேந்திரா காசிப்பிள்ளை 1927.09.21 அன்று கொழும்பில் பிறந்தார். இவர் தன் கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியில் கற்ற போது ரோயல் கல்லூரிக்காக 1944 தொடக்கம் 1947ம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு அப்பாடசாலையில் தன் இறுதி ஆண்டு காலத்தில் ரோயல் கல்லூரியின் கிரிக்கெட் அணிக்கு தலைவராகவும் செயற்பட்டது இங்கு நினைவு கூறத்தக்க விடயமாகும். இதன் பின் தன் பாடசாலை கல்வியை முடித்தவுடன் தமிழ் யூனியன் கழகத்தில் இணைந்து கொண்டு 1950-51ம் காலப்பகுதியில் சத்தி குமாரசாமியின் தலைமையில் சரவணமுத்து கோப்பையை வென்ற தமிழ் யூனியன் அணியில் இடம்பெற்றிருந்தார்.

1949ம் ஆண்டு முகமது சையத் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவர் அறிமுகமானார் இப்போட்டியானது உத்தியேக பூர்வமற்ற  டெஸ்ட் போட்டியாகவும், பாகிஸ்தான் அணியின் முதல் இலங்கை விஜயமாகவும் இருந்தது. இப்போட்டியானது கொழும்பு ஓவல் மைதானத்தில் 1949ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,2 மற்றும் 3ம் திகதிகளில் நடைபெற்றது. இப்போபட்டியில் ஏழாவது விக்கெட்டுக்காக விஜேசிங்கவுடன் இணைந்து 48 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதுடன் தன் பங்களிப்பாக 24 ஓட்டங்களையும் சேர்த்திருந்தார் காசிப்பிள்ளை அவர்கள்.

காசிப்பிள்ளை 1952 பெப்ரவரி 22,23 மற்றும் 24ம் திகதி அன்று MCC அணிக்கு எதிராக தன் கடைசி போட்டியில் விளையாடி இருந்தார். இவர் கேம்பிரிச் பல்கலை கழகத்தில் கல்வி கற்ற போது அப்பல்கலை கழகத்திற்காகவும் பல போட்டிகளில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். 1956ல் சரே அணிக்கு எதிராக கேம்பிரிச் பல்கலை கழகத்திற்காக அறிமுகமான இவர் 1957ம் ஆண்டு மிடில்செக்ஸ் அணிக்காக விளையாடிய போட்டியே இவரின் இறுதிப்போட்டியாக அமைந்தது. இவர் அப் போட்டியில் 62 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இடது கை துடுப்பாட்ட  வீரரான இவர் 11 முதல்தர போட்டிகளில் விளையாடி 277 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். அதி கூடிய ஓட்டங்களாக 62 எட்டிப்பிடித்த இவர் ஒரு இடது கை ஓத்தடொக்ஸ் (Orthodox)  பந்து வீச்சாளராகவும் திகழ்ந்துள்ளார். இவர் தன் பந்து வீச்சால் 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன், சிறந்த பந்து வீச்சு பெறுதியாக 36 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியதாகும் இது தவிர இவர் 04 பிடிகளையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் 1998 ஏப்ரல் மாதம் 04ம் திகதி கண்டியில் தன் 70வது வயதில் இயற்கையெய்தினார்.


Comments