நானும் என் சமுர்த்தியும் 85ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 85ம் தொடர்.......

1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்ட்ட சமுர்த்தி திட்டம் 2012ல் பல புதிய செயற்பாடுகளுடன் முன்னேற்றம் காண்பதற்கான அடித்தளத்தை இட்டுக் கொண்டது. இன்று CRM, HRM என சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அங்கலாய்த்து திரிய இதற்கான செயற்பாடுகளை 2012 அன்றே சமுர்த்தி திட்டம் தொடங்கி விட்டது. 2012ம்  ஆண்டு தொடங்கப்பட்ட போது சமுர்த்தி அதிகார சபையால் சமுர்த்தியின் செயற்பாட்டுத்திட்டத்தின் குறிக்கோள்கள் வெளியிடப்பட்டிருந்தது

• சமுர்த்தி பயனாளிகள்  மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுதல்.

• கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடிப்படையில் திட்டமிட்டு அமுலாக்குதல்.

• கீழிருந்து மேல் நோக்கிய தேவைகளை இனங்காணும் நடவடிக்கைகளை மேற் கொள்ளப்படுவதுடன் இதன் பொருட்டு ஒரு வழிகாட்டலை நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளுதல்

• அரசாங்க நிதியங்கள் (திறைசேரி ஒதுக்கீடுகள்), சமுர்த்தி வங்கிச்சங்கத்தின் கடன்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் பிரதான பங்களிப்புடன் நிதிகளை வழங்குதல்.

• மிலேனிய அபிவிருத்தி இலக்குக்காக  'சார்க்' பிராந்திய சமூகக் கொள்கைகள், மஹிந்த சிந்தனை இலக்குகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு வேலைத்திட்டங்களை வரிசைப்படுத்தி செயற்படுத்தல்.

 • 2012ம் ஆண்டின் உத்தேச வரவுசெலவு திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள இருபத்தைந்து இலட்சம் மனைப்பொருளாதார அலகுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தோடு இணைந்ததாக அகில இலங்கை பூராகவும் ஒழுக்காற்று மற்றும் ஆத்மீக அபிவிருத்தி வாழ்வாதார அபிவிருத்தியும், வாழ்வாதார அபிவிருத்திக்கு உதவுகின்ற உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து செயற்படுத்தல்.  

கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றுக்கு ஆகக்குறைந்தது 180 மனைப்பொருளாதார அலகுகளை அபிவிருத்தியின் பொருட்டு இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த வேலைத்திட்டங்கள் அமைச்சின் வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளின் கீழ் வாழ்வாதார, சமூக அபிவிருத்தி மற்றும் கிராம அபிவிருத்திப் பிரிவின் மூலம் செயற்படுத்தப்படுத்துதல் 

• சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரை தங்கி வாழும் மனோநிலையில் இருந்து மீட்டு வலுவூட்டுவதனூடாக அபிவிருத்தியினை நோக்கி முன்னேற உதவுதல் போன்ற குறிக்கோள்கள் வெளியிடப்பட்டன. அத்துடன் 2012ம் ஆண்டில் தேசிய வேலைத்திட்டமான திவிநெகும-வாழ்வெழுச்சி வேலைத்திட்டத்தோடு இணைந்ததாக செயற்படுத்த முடிவெட்டப்பட்டு 2012ம் ஆண்டில் மிக முக்கியமாக ஆத்மீகம் மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தில்  ஆத்மீக அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டமும் திரியபியச வீடமைப்புத்திட்டம் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு செயற்படவுள்ளதாக அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகளை தயாரிக்குமாறும் எமக்கு கூறப்பட்டது.

2012ம் ஆண்டில் தான்  தகவல் தொழில்நுட்ப அலகினை செயற்படுத்த திட்டமிடப்பட்டு செயற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதன் முக்கிய பகுதியாக esamurdhi வேலைத்திட்டத்தினை ஏற்படுத்தி இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் சகல பணிகளையும் கணணி மயப்படுத்தும் நோக்குடன் இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவராண்மை நிறுவனத்தோடு (ICTA) இணைந்து இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தது. இதன் பொருட்டு இவ்வேலைத்திட்டம் 03 பிரதான பிரதான பிரிவுகளாக பிரிக்கப்பட்டு  கணணி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது.

 • மனிதவள முகாமைத்துவம் - Human resource management (HRM)   இலங்கை சமுர்த்தி அதிகார சபையில் கீழ் கிட்டத்தட்ட 24000 உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரினதும் தகவல்களை கணணி கூற்றின் உட்புகுத்துவதன் மூலம் இவர்களின் தகவல்களை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் எனும் நோக்கில் இத்திட்டம் 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

 • பயனாளிகள்(வாடிக்கையாளர்) தகவல் முகாமைத்துவம் Customer relationship management  (CRM) இத்திட்டமானது குறைந்த வருமானம் பெரும் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களின் தகவல்களை கணணி இணைக்கப்படுவதாகும். இதில் சமுர்த்தி பயனுகரியின் குடும்ப விபரம், கருத்திட்டம், சமுர்த்தி வங்கியில் பெற்றுக் கொண்ட கடன்கள், சமுர்த்தி நிவாரனம் தொடர்பான விபரங்கள் போன்றவற்றை கணணியில் உட்புகுத்துவதன் மூலம் இலகுவாக கிராம தகவல்களை பெற்றுக் கொள்ள உதவும் எனும் நோக்கில் 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

• கருத்திட்டம் மற்றும் நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவம் - இதன் கீழ் சமுர்த்தி அதிகாரசபையின் வருடாந்த செயற்பாட்டு தகவல்களை பிரிவுகள் அடிப்படையில் கணணி மயப்படுத்தப்பட்டு உரிய வலையமைப்பின் ஊடாக அங்கீகாரத்தினை பெறுவதற்காக சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளுக்காக மேற் கொள்ளப்பட்டுள்ளப்படுவதாகும்.  இதன் மூலம் அந்தந்த பிரிவுகளின் கீழ் செயற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள வேலைத் திட்டங்களுக்குரிய சுற்றறிக்கைகளை கணணி மயப்படுத்தப்படுவதுடன்  அதற்கான ஆலோசனைகளின் பிரகாரம் பிரதேச மட்டங்களின் கருத்திட்டங்களை இனங்காண்டு பிரதேச செயலக மட்டத்தில் கணணி மயப்படுத்தப்படுத்தி  கருத்திட்டத்தின நிதிப் பெறுமதிக் கேற்ப பிரதேச மட்டத்தின் ஊடாக மாவட்ட மட்டம் அல்லது தேசிய மட்டத்தில் அனுமதிக்கப்படுகின்ற திட்டங்களின் தகவல்களை பெற்று  எவ்வாறு கணணியில் உட்புகுத்துவது தொடர்பில் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகள் 2012ம் ஆண்டில் செயற்படுத்த தொடங்கியது. இவ்வேலைத்திட்டமே தற்போது CRM, HRM எனும் இலகு வேலைத்திட்டமாக மாற்றமடைந்துள்ளது.

தொடரும்.......


Comments