நானும் என் சமுர்த்தியும் 72ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 72ம் தொடர்.......

நடேசராஜா சேர் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு பணிப்பாளர் நாயகம் அம்பாறையில் இருந்து வெளிக்கிட்டு விட்டார் நான் கல்லடிக்கு வந்துவிட்டேன் என்றார். நடேசராஜா சேரும் வந்து விட்டார் பிரதேச செயலாளர் நிகழ்வை ஆரம்பிப்போம் என்றார் என்ன செய்வது நிகழ்வை ஆரம்பித்து நடாத்தி கொண்டிருந்தோம், ஒரு பத்து நிமிடத்தில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ அவர்களும் அம்பாறை மாவட்ட சமுர்த்தி ஒருங்கினைப்பாளர் I.அலியார் அவர்களும் வருகை தருவதாக தகவல் அப்போது தான் என் நெஞ்சில் பால் வார்த்தது போல் இருந்தது.



 அனைவரும் வெளியில் எழுந்து வந்து நின்ற போது அவர்கள் வருகை தந்தனர் மாலைகள் அணிவித்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தோம். நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்ற வண்ணம் இருந்தது. எனது கிராம கையேடான உச்சம் கையேட்டு நூலினை கல்லடி வேலூர் கிராமத்தின் சமுர்த்தி ஒன்றிய தலைவி மகேந்திரராஜா தங்கேஸ்வரி அவர்கள் முதல் பிரதியை இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ அவர்களிடம் கையளித்தார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது பணிப்பாளர் நாயகம் அவர்கள் எனது கிராம நிகழ்வில் கலந்து கொள்வது. இதன் போது 2011ம் ஆண்டின் சிறந்த சங்கமாக தெரிவு செய்யப்பட்ட காயத்திரி சமுர்த்தி சங்கத்திற்கு அவர் கைகளால் நினைவு சின்னம் வழங்கப்பட்டது நான் நினைத்த ஒவ்வொரு விடயமும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. 

 அடுத்ததாக 2011ல் சித்திரை சேமிப்பு, புகைத்தல் எதிர்ப்பு சேமிப்பில் பிரதேச செயலக மட்டத்தில் அதிக சேமிப்பு செய்த 10 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டது. நான் முடிவே எடுத்திருந்தேன் இவ்நினைவு சின்னத்தை பெறுவது இல்லை என்று ஆனால் என் கிராம மக்களுக்கு இது தெரிந்து விட்டது நீங்கள் இதை கட்டாயம் பெற வேண்டும் என என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தனர். எனது பெயரும் அறிவிக்கப்பட்டது நான் மேடை ஏறினேன் என் கண்முன்னே இன்றும் அந்த நிகழ்வு தெரிகின்றன எனது மக்கள் என் கண் மாத்திரம் தெரியும் அளவிற்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். அப்போதே நான் அறிந்து கொண்டேன் இந்த சின்னங்களுக்கும், சான்றிதழ்களுக்கும் அடி பணியாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று.

இதன் பின் நடேசராஜா சேர் அவர்களை கௌரவித்தோம் நானே அவரைப்பற்றி எழுதிய வாழ்த்துப்பாவை நானே வாசித்தேன். பின் நடேசராஜா சேர் அவர்கள் தனதுரையில் என்னையும் என் கிராமத்தையும் புகழ்ந்து கூறினார். இதன்பின் பணிப்பாளர் நாயகம் தமதுரையில் ஒரு கிராமம் இந்நிகழ்வை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் செய்துள்ளதாகவும் இக்கிராம மக்கள் சமுர்த்தி உத்தியோகத்தரில் எவ்வளவு மரியாதையையும் அன்பையும் வைத்துள்ளார்கள் என்பதை பார்க்கும் போது சமுர்த்தியின் பணிப்பாளர் நாயகமான எனக்குத்தான் பெருமையாக உள்ளதாக கூறியதுடன் மக்களுக்கான சேவையை இவ் உத்தியோகத்தர் திறம்பட செய்துள்ளார் என்பதற்கு இன்று இங்கு வழங்கப்படவுள்ள இந்த ஆறு ஆட்டோ வண்டிகளுமே சாட்சி என்று கூறினார். எனக்கு பெருமையாக இருந்தது என் வாழ்வில் இதை நான் கனவாகவே காணவில்லை அதை நனவாகவே நடேசராஜா சேர் நடாத்தி வைத்தார்.

பின்னர் உரிய சமுர்த்தி பயனாளிகளிடம் ஆட்டோ கையளிக்கப்பட்டது. ஆட்டோவில் பணிபாளர் நாயகம், நடேசராஜா சேர், பிரதிப்பணிப்பாளர் என சகலரும் அவ்விடத்தில் பயணித்தனர். என் வாழ்வில் மறக்க முடியாத தருனமாக அன்றைய நாள் இருந்தது.

தொடரும்....


















Comments