நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (43ம் தொடர்).......

நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (43ம் தொடர்).......

மகளிர் தின நிகழ்வுகள் முடிவுற்றதும் சித்திரை மாதம் கட்டாயம் புதுவருட சேமிப்பு இருக்கும் இம்முறை கட்டாயம் மாவட்ட மட்டத்தில் அதி கூடிய சேமிப்பை செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். ஏன் என்றால் சுமார் 69 சிறு குழுக்கள் 9 சமுர்த்தி சங்கங்கள் ஒரு சங்கத்திற்கு ஒரு லட்சம் சேமிப்பை செய்தால் மாவட்டாத்தில் முதலிடத்தை பிடிக்கலாம் என திட்டமிட்டேன். சங்க தலைவர்களை அழைத்து இவ்வருடம் ஒரு லட்சத்திற்கு அதிகமாக சேமிக்கும் அனைத்து சங்கங்களும் கௌரவிக்கப்படும் என்றும் ஒவ்வொரு சங்கமும் கட்டாயம் ஒரு லட்சம் சேமிப்பை சேமிக்க வேண்டும் என்றும் கூறினேன்.

இதற்கிடையில் கல்லடி சமுர்த்தி வங்கியின் புதிய கட்டிட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தது. 2010.04.12 அன்று சமுர்த்தி வங்கி திறக்க  இருப்பதாகவும் அதற்குரிய பணிகளையும் செய்யுமாறு முகாமையாளர் தெரிவித்தார். நாமும் பழைய நாவற்குடா கட்டிடத்தில் இருந்த பொருட்களை சங்க தலைவர்களின் உதவியுடன் வாகனங்களில் ஏற்றி புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றினோம்.

மறு புரத்தில் சித்திரை சேமிப்பிற்காக சங்கங்களை தயார் படுத்தினேன். சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களும் தங்கள் சங்கங்களை சித்திரை சேமிப்பு செய்ய அறிவுறுத்தி இருந்தது. நான் இருதயபுரத்தில் இருந்து மூன்று சித்திரை புத்தாண்டில் சேமிப்பில் ஈடுபட்டேன் கல்லடிவேலூரில் முதல் தடவையாக சித்திரை புத்தாண்டு சேமிப்பில்  ஈடுபட தயாரானேன்.

கல்லடி சமுர்த்தி வங்கியை புதிதாக அமைப்பதில் கல்லடி சமுர்த்தி வலய முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்கள் தம் அர்பணிப்பான சேவையினை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ் வங்கிக்கான அடிக்கல்லினை 2009ம் ஆண்டில் அப்போதிருந்த பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களால் நடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். 12.04.2010 அன்று வங்கி கட்டிடம் திறப்பதற்காக சகல நடவடிக்கைகளும் முடிவடைந்து இருந்தன. அன்று காலை 10.30 மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. வங்கி கட்டிடத்தை பிரதம அதீதியான மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் K.விமலநாதன் அவர்களின் கைகளினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அதீதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அவர்களும், புளியந்தீவு, இருதயபுரம், இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர்களும் கலந்து கொண்டதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சங்க தலைவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

 

12.04.2010 அன்று வங்கி திறப்பு விழா 14.04.2010 அன்று சித்திரை புதுவருட சேமிப்பு ஆரம்பமாகியது. ஒவ்வொரு உத்தியோகத்தாத்களும் தங்கள் சேமிப்பை வைப்பிலிட்டபடி இருந்தனர் நானும் எனது லட்சுமி சமுர்த்தி சங்கத்தின் மூத்த உறுப்பினரான இ.இராசையா அவர்களின் கைகளினால் முதல் பணத்தை வங்கி முகாமையாளர் J.F.மனோகிதராஜிடம் வழங்கி எனது கிராம சேமிப்பையும் ஆரம்பித்தேன்.

பயனாளிகளை வங்கிக்கு அழைத்து வந்து சிறுவர், பங்கு, அங்கத்தவர் கணக்குகளை ஆரம்பித்தேன். கிராமத்தில் சங்க தலைவர்கள் மூலம் புதிய குழுக்களை உருவாக்குதல் தொடர்பாக கலந்தரையாடி கணக்குகளை ஆரம்பித்தேன். சித்திரை புது வருடம் கொண்டாட்டம் கிராமத்தில் ஒரு புறம் போக நானும் கிராமத்தில் சேமிப்பை சேமித்துக் கொண்டு இருந்தேன். கல்லடி வலயத்தை பொறுத்தமட்டில் ரூபன், உமாபதி, ரவீந்திரகுமார், இந்திராகாந்தி, சிறிதரன்  போன்றோரிடமே அதிக போட்டி பல வருடமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இம்முறை நாமும் போட்டியில் கலந்து கொள்வோம் என எண்ணியே செயற்பட்டேன். தைப் பொங்கல் சேமிப்பில் முதலிடம், கோலப்போட்டியில் முதலிடம் இதிலும் முதலிடம் பெற்றால் 2010 ஹட்றிக் வெற்றி எனும் கனவுடன் ஒரு வார சேமிப்பில் ஈடுபட்டுக் கொண்டேன். நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றன் உத்தியோகத்தர்களும் ஒருவருக்கொருவர் தெரியாமல் சேமிப்பை வங்கியில் இட்டபடி  இருந்தனர்.

 17.04.2010 அன்றுடன் சேமிப்பு முடிந்து விட்டதாகவும் வலய ரீதியாக சேமிப்புக்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும் நாளை முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முகாமையாளர் தெரிவித்தார்.

தொடரும்..........

 


Comments