நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (32ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (32ம் தொடர்).......

21.08.2009 முதல் என்னை கல்லடிவேலூர் கிராமத்திற்கு சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றுமாறும் நாவலடி கிராமத்தை பதில் கடமையாற்றுமாறும் அறிவுறுத்தி கடிதம் வழங்கப்பட்டிருந்தது. ஏற்கனவே என்னை பல முறை சந்தித்த கல்லடி வலய முகாமையாளராக கடமையாற்றி J.F.மணோகிதராஜ் அவர்கள் நீ கட்டாயம் என்னுடன் பணியாற்ற வேண்டும் என கூறி வந்தார் அதன் பொருட்டோ எனக்கு இடமாற்றம் வந்தது என கூறியவனாக இடமாற்றத்திற்கான ஆவணங்களை ஒப்படைக்கும் பணியில் மும்முரமாக செயற்பட்டேன். இதன் போது கீதா கணகசிங்கம் முகாமையாளர் இன்னும் சிறிது காலம் இங்கு கடமையாற்றுங்கள் ஒரு வருடத்தின் பின் இடமாற்றலாகி செல்லலாம் தானே என்றார்  நான் கூறினேன் இல்லை என் சொந்த கிராமம் ஆகிற்றே அங்கே பணி செய்வது இன்னும் இலகுவாக இருக்கும் என்று கூறினேன்.

 இதன் போது  இருதயபுரம் கிழக்கில் முகாமையாளர் முன்னிலையில் உரிய ஆவணங்களை  ஒப்படைத்து விட்டு அக்கிராமத்தில் இருந்து விடைபெற்றேன்.  அக்கிராமத்தில் என்னுடன் தோளோடு தோள் நின்று உழைத்த சங்க தலைவர்களாக, செயலாளர்களாக, பொருளாளர்களாக செயற்பட்ட திருமதி.கண்ணகி, திருமதி.ஜெயமணி, திருமதி.லீலா, திருமதி.கமலா, திருமதி.யூனிட் ஸ்பெக், திருமதி.மக்ளின் ஸ்பெக், திருமதி.அன்னமலர், திருமதி.ஜெயபவாணி போன்றோருக்கும் இன்னும் பலருக்கும் நான் இன்றும் நன்றி கூற கடமைப்பாடு உடையவனாக இருக்கின்றேன்.

21.08.2009 நான் கல்லடி சமுர்த்தி வங்கிக்கு சென்றேன் 2004ம் ஆண்டு சுனாமிக்கு கொடுப்பணவு பெற கல்லடி சமுர்த்தி வங்கிக்கு சென்ற பின் 2009ம் ஆண்டு தான் முதன் முதலில் அங்கு சென்றேன். அப்போதும் அந்த தற்காலிக கட்டிடத்தில் தான் சமுர்த்தி வங்கி இயங்கி வந்தது. சமுர்த்தி முகாமையாளராக J.F.மணோகிதராஜ் அவர்கள் கடமையாற்றி வந்தார். அன்றைய தினம் விடுவிப்பு கடிதத்துடன் அவரிடம் சென்ற போது இன்முகத்துடன் என்னை வரவேற்றார். அவரின் பல நாள் கனவு அன்று தான் நிறைவேறியவாறு வந்தித்தீங்க இனி பாப்பம் உங்கட ஆட்டத்த என்றார். அங்கு சிவநாதன், சுகுமார், ரவீந்திரகுமார், சிறிதரன், சிறிகரன், தாட்சாயினி, கிருஸ்ணவேணி, உமாபதி, செய்துன்வீவி, லதா, புஸ்பலதா, லவேந்திரன், ரூபன் போன்றோர் கடமையாற்றி கொண்டு இருந்தனர். பெரியதொரு படையணியுடன் கடமையாற்ற போகின்றோம் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்.

அப்போது கல்லடிவேலூர் கிராமத்தில் திருமதி.லவேந்திரன் அவர்கள் கடமையாற்றி வந்தார். நாவலடி கிராமத்தில் இளங்கோ அவர்கள் கடமையாற்றி வந்தார். இரண்டு நாட்களில் ஆவணங்களை ஒப்படைப்பதாக எனக்கு கூறப்பட்டது இதன் படி என்னிடம் ஒரு சில ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதே போல் இளங்கோ அவர்களும் நாவலடி கிராமத்தின் சில ஆவணங்களை மாத்திரம் ஒப்படைத்தார். எனது வீடு அமைந்துள்ள கிராமம் தான் கல்லடி வேலூர் அதனால் பலரை எனக்கு தெரியும். இருந்தும் பலர் நான் இங்கு கடமையாற்ற வருவதை விரும்பவில்லை. எனவே இதை நான் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முதல் முறையாக கல்லடிவேலூர் கிராமத்தில் சங்க தலைவர்களை சந்திக்க முயற்சி செய்தேன். இதற்காக இக்கிராமத்தில் நான் சந்தித்த முதல் ஆள் தான் ராயு அவர்கள். சமுர்த்தி ஆரம்பம் முதல் தன் சிறப்பான செயற்பாடு மூலம் சமுர்த்தியில் தனக்கென்று ஒரு இடத்தை கிராமத்திலும் சமுர்த்தி வங்கியிலும் பெற்றிருந்தவர் தான் ராயு அவர்கள். இவரே தலைவர்களை சந்திக்க ஏற்பாடு செய்தார் மொத்தம் எட்டு சமுர்த்தி சங்கம் இயங்குவதாகவும் ஒரு சில தலைவர்கள் அக் கூட்டத்திற்கு வராமலும் இருந்து விட்டனர். நானும் அடுத்த முறை சந்திப்பதாக விட்டு விட்டேன்.

இதற்கிடையில் 3060 கிராம வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகளை நாவலடி கிராமத்தில் வழங்குவதற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு கடல் தொழிலுக்கான உபகரணங்களான தோணி மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கல்லடி சமுர்த்தி வலய முகாமையாளர் J.F.மணோகிதராஜ் அவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....

 தொடரும்....... 
(2009ல் 3060 கிராமத்தின் வாழ்வாதார உதவிகள் நாவலடி கிராமத்தில் வழங்கப்பட்ட போது)

(என்னால் வெளியடப்பட்ட மூன்றாவது ஸ்நேகம் பத்திரிக்கை 5ம் ஆண்டு புலமை பரீட்சை மாதிரிதாள் இணைப்பு)




(என்னால் வெளியடப்பட்ட மூன்றாவது ஸ்நேகம் பத்திரிக்கை)





Comments