நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (18ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (18ம் தொடர்).......


என்ன வேலை என நான் கேட்ட போது சமுர்த்தி வேலை தான் என அத்தான் சொன்னார். என்ன அத்தான் பழைய வேலையா கிடைச்சிருக்கு என்றேன். இல்லை இது புதிய நியமனமாக வழங்கப்படவுள்ளதாக கூறினார் என்னடா நாம வேணாம் வேணாம் என்று போக இது நம்மள துரத்தி வருகின்றது என எனக்குள்ளே கேட்டுக் கொண்டு அவருடன் அலுவலகத்தில் நுழைந்தேன். அங்கு வைத்து உடனடியாக எனக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டது. மீண்டும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கே நியமன கடிதம் தரப்பட்டது. அன்று இரவே மிகுந்த சந்தோசத்துடன் மட்டக்களப்பு புறப்பட்டேன்.

அக்கடிதத்தில் 2005.10.28ம் திகதி முதல் கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் - 2  பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளீர் என்றும் தங்களை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு  நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நியமன கடிதத்தை எடுத்துக் கொண்டு மாவட்ட செயலகத்திற்கு சென்றேன். சமுர்த்தி உதவி ஆணையாளராக இருந்த இரா.நெடுஞ்செழியன் ஐயாவிடம் கடிதத்தை கொடுத்தேன் பார்த்து விட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கே மீண்டும் வந்தீங்க என கேட்டபடி வாழ்த்துக்களை கூறி மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கடிதத்தை என்னிடம் தந்தார். அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு அப்போதிருந்த  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிறிசங்கர் ஐயாவிடம் ஒப்படைத்த போது பார்த்துவிட்டு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியனிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.

அங்கே சென்றவுடன் அனைவரும் ஜெயதாசன் மண்முனை வடக்கிற்கே மீண்டும் வந்து விட்டான் என கூறிக் கொண்டு இருந்தனர். சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அவர்கள் உடனடியாக எனக்குரிய வலயத்திற்கான நியமன கடிதத்தை என்னிடம் தந்தார். அதில் 2005.11.02ம் திகதி முதல் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயத்தில இணைக்கப்பட்டுள்ளீர் என குறிப்பிட்டிருந்தது. 2005.11.31 அன்று திங்கட் கிழமை பிரதேச செயலகம் என்ற படியால் அன்றைய தினம் பிரதேச செயலகத்தில் கடமைக்காக சென்றேன் என் பழைய நண்பர்கள் எல்லோரும் என்னை கட்டியணைத்து தங்கள் சந்தோசத்தை வெளிக்காட்டினர். அதில் மிக முக்கிமாக யூட் செல்வா இராஜரெட்ணம்(செல்லா) மிகவும் சந்தோசம் அடைந்தான். அவன் பல தடவை வேலைய திரும்ப எடு  என கூறி வந்தவன் வேலை இல்லாத கால கட்டத்தில் எனது வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறிய நண்பன் இன்றும் அவனுடைய நண்பு அவ்வாறே உள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன். எல்லோரும் பழைய நியமனம் தானே என கேட்டார்கள். நான் இல்லை புதிது என்றேன் எப்படிடா என்று கேட்டார்கள், இது தான் கடவுளின் சித்தம் என்றேன். எந்த வலயம் என கேட்டார்கள் இருதயபுரம் கிழக்கு என்று கூறினேன். மறு நாள் 02.11.2005 அன்று செவ்வாய் கிழமை அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயத்திற்கு சென்றேன். அனேகமாக தெரிந்த முகங்கள் காணப்பட்டன அவர்களுடன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இருதயபுரம் சமுர்த்தி வலயத்தின் அப்போதைய முகாமையாளர் திரு.குருபரன் அவர்கள் வந்தார். கடிதத்தை பார்த்துவிட்டு நாளைக்கு உங்களுக்கான கிராமத்தினை குறிப்பிட்டு  கடிதம் தாரன் இப்ப ஒப்பமிட்டு வலயத்தில் இருக்குமாறு கூறினார்.

மறு நாள் காலையில் கடமைக்காக சென்றேன் அப்போது வலய முகாமையாளர் அழைத்து  உங்களை இருதயபுரம் கிழக்கு கிராமத்திற்கு நான் போட்டுள்ளேன் நீங்கள் அங்கு வேலை செய்யுங்கள் என்றார். நானும் சரி கூறிக் கொண்டேன். அப்போது அக்கிராமத்தை திருமதி.புஸ்பராணி அவர்கள் பதில் கிராம  சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தார். அவர் அக்கிராமத்திற்கான சகல ஆவனங்களையும் என்னிடம் மறு நாள் ஒப்படைத்தார். நானும் ஏதோ வந்தோம் பணி செய்வோம் என இரண்டு வருடங்களை கழித்தேன். அதன் பின் தான் சிந்தித்தேன் ஏன் நாம் மக்களுக்காக அர்பணிப்புடன் பணிபுரிந்தால் என்ன என்று சிந்தித்துக் கொண்டு ஒரு திடமான முடிவுக்கு வந்தேன்.....

தொடரும்.........


Comments