117வது திருவிழாவை கொண்டாடிய நாவற்குடா சின்ன லூர்து ஆலயம்.....
117 வருட வரலாற்றை கொண்ட மட்டக்களப்பு நாவற்குடா தூய சின்ன லூர்து ஆலயத்தின், திருவிழா திருப்பலியானது அருட்தந்தை ஜே.மார்சல் (JDH) அடிகளாரின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவுக்கு வந்தது.
07.02.2025 அன்று பங்குத்தந்தை அ.யேசுதாஸன் அடிகளாரால் கொடியேற்றப்பட்டு, 09 நவநாட்களுடன் திருவிழா கொண்டாடப்பட்டது. இலங்கையில் சரித்திர வரலாறு கொண்ட இவ்வாலயம் ஆரம்பித்தது தொடக்கம் ஆலயம் கட்டப்பட்டது வரையிலான ஒரு சிறு தொகுப்பை நாம் கீழே சற்றுபார்ப்போம்........
நாவற்குடா சின்ன லூர்து சிற்றாலய வரலாறு, கி.பி. 1908ம் ஆண்டளவில் ஆரம்பமாகிறது. கல்லடிப் பாலம் கட்டப்படு முன்னே, புளியந்தீவுக்கும் தெற்குக் கரையோர நிலப்பரப்புக்குமிடையே வள்ளங்கள் மூலமாகத்தான் பிரயாணிகள் வாவியைக் கடந்து சென்றார்கள். மட்டக்களப்புக் கோட்டையின் பின்னால் வாவிக்கரையில் ஓர் இறங்குதுறை அமைந்திருந்தது. வாவியின் மறுதுறை, நாவற்குடாக் கிராமத்தின் வடமுனையாகிய கல்லடியில் அமைந்திருந்தது. அக் காலத்தில், இந்துக்களின் செல்வாக்குக்குட்பட்டதோரிடமாகவே நாவற்குடா விளங்கியது.

1909ம் ஆண்டளவில், அருட்தந்தை L.ஆராஸ் யே.ச. அவர்களுக்கு, திரேவூ என்ற இடத்துக் கார்மேல் கன்னியரிடமிருந்து, லூர்து அன்னையின் ஆழகான சொரூபம் ஒன்று வந்து சேர்ந்தது. பார்வையாளரைக் கவர்ந்த அழகான 'இனாமல்" கண்கள் இச் சொரூபத்திற்கு பொருத்தப்பட்டிருந்தன. அதே ஆண்டு, ஐப்பசி மாதம் 17ம் திகதி, இச் சொரூபத்தை, ஆயர் லவிஞ் ஆண்டகையவர்கள் உத்தியோகபூர்வமாக ஆசீர்வதித்து, நாவற்குடாச் சிற்றாலயத்தில் ஸ்தாபித்து வைத்தார். அதற்கு முந்தி இரவு முழுவதும், அந்த சுருவத்தை புனித மிக்கேல் பாடசாலைப் பெற்றாராக இருந்த ஓர் இந்துப் பெரியவரின், வழிபாட்டறையிலே, திரு விளக்கெரிய இச் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. அருட்தந்தை சாள்ஸ் றிச்சாட் அவர்களின் அச்சிடப்படாத ஆவணமொன்றிலே இச் சொரூபம் பற்றிய குறிப்பொன்று உள்ளது. அன்னையின் சொரூபத்தை, இந்த இந்துப் பெரியார் கண்மூடாது பார்த்துக்கொண்டிருப்பாராம். 'சுவாமிகளின் சமயம் அழகானது. எம்மையும் செபிக்கக் கூப்பிடுவது போல் கைகளைக் குவித்துக் கொண்டு மோட்சத்தைப் அண்ணார்ந்து நோக்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான சொரூபத்தைப் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும்" என்று இந்தப் பெரியார் கூறியதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்படுகிறது.
புனித செபஸ்தியார் பங்கில் தங்கியருந்த அருட்தந்தை ஹொப்பனோ அவர்கள், முக்கியமான பணிகளுக்காக நாவற்குடாவுக்குச் சென்று வந்து கொண்டிருந்தார். ஆரம்பத்திலிருந்த சிற்றாலயம் ஓர் ஓலைக் கொட்டிலென்றுதான் சொல்ல வேண்டும். 1920ம் ஆண்டுக்கு முன், இது கற்கட்டமாகி, ஓட்டினால் வேயப்பட்டது. அருட்தந்தை ஹொப்பனோ, மெதுவாக சக்கிறீஸ்ரியிலே குடியேறினார். இங்கிருந்துதான் அவர் தமது மறைபரப்புப் பணியை ஆரையம்பதி, தாளங்குடா கிராமங்களுக்கு விஸ்தரித்தார்.
1960ம் ஆண்டிலே, அருட்தந்தை பிளசிடஸ் சில்வா அவர்கள், லூர்து அன்னைக்கு ஒரு கெவியை நிர்மாணிக்க ஆரம்பித்து, 1963ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6ம் திகதி, தந்தை பீலிக்ஸ் கிளாக்சன் யே.ச. அவர்கள் கெவிக்கான அடிக்கலை ஆசீர்வதித்துப் பதித்து கட்டிட வேலைகளை மூன்று வருடங்களுக்குள் முடித்தார். 1966-02-11ஆம் திகதி புதிய கெவி ஆயர் கிளெனி ஆண்டகையினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டதுடன் மாதாவின் ஆசீநீரும் மக்களின் பினி தீர்க்கும் நீராக மாற பிரான்ஸ் தேசத்தில் லூர்து மாதா ஆலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு புதிதாக கிணறு அமைக்கப்பட்டு அதையும் திறந்துவைத்து, தந்தை பிளசிடஸ் கெவிக்கு 'சின்ன லூர்து" என நாமஞ் சூட்டி, நாடு முழுவதிலுமிருந்து, பெருந்திரளான சிங்கள, தமிழ் யாத்திசிகர்கள் வந்து தங்கிசெல்லும் ஒரு புண்ணியஸ்தலமாக நாவற்குடாவை மாற்றியது.
1994ஆம் ஆண்டு அருட்பணி. T.சாமிநாதன் அடிகளார் நாவற்குடாவில் அன்னைக்கு புதிதாக ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என கூறி அதற்கான நிதியை மக்களிடம் இருந்து திரட்டலாம் என ஒரு திட்டத்தை முன்வைத்தார். அதன் பின் 2003ம் ஆண்டளவில் அருட்பணி. பி.ஏ.ஜோசப் அவர்கள் ஆலய கட்டிடத்திற்கென ஒரு புதிய வங்கி கணக்கை ஆரம்பித்ததுடன் புதிய ஆலயத்திற்கான அடிக்கலினை அன்றைய திருகோணமலை – மட்டக்களப்பு மறை மாநில ஆயர் அதிவந்தனைக்குறிய கலாநிதி ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்ககால் ஆலயத்திற்கான அடிக்கல் 2008.12.08ம் திகதியன்று நாட்டப்பட்டது.
2011ம் ஆண்டு பங்குத்தந்தையாக அருட்பணி XI.ரஜீவன் அடிகளார் அவர்கள் வருகை தந்ததன் பின்னர் ஆலயத்தில் மாதாவின் ஆசி நீர் கிணறு தூர்வாங்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது, சேமக்காலையில் மாதாசுருவம் ஸ்தாபிக்கப்பட்டது, மாதாவின் கெவி புதுப்பிக்கபட்டு பீடத்திற்கு மாபில் பதிக்கப்பட்டு, சில்வர் கிராதி அடிக்கப்பட்டது, சிலுவைபாதை செய்வதற்காக சிலுவைகள் நாட்டப்பட்டதுடன், ஆலயத்திற்கான மதில்கள் அமைக்கப்பட்டது மற்றும் சேமக்காலையில் மதில்கள் அமைக்கப்பட்டு, பீடமும் தாபிக்கப்பட்டது. பல அருட்பணியாளர்களின் எண்ணமும் பங்கு மக்களின் கனவாகிய ஆலய கட்டுமாண பணிகளை அருட்பணி XI.ரஜீவன் அடிகளார் 11.02.2014ம் தொடங்கினார். கட்டுமாண பணிகள் தொடங்கப்பட்டு சரியாக 309 நாட்களில் மிகப்பிரமான்டமான ஆலயத்தை கட்டி முடித்துள்ளார்.
இவ்புதிய ஆலயம் 16.12.2014 மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆன்டகை அவர்களால் அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
Comments
Post a Comment