காத்தான்குடியில் வீடு ஒன்றில் துப்பாக்கிச்சூடு : பெண்ணொருவர் காயம், சந்தேக நபர் கைது...........

காத்தான்குடியில் வீடு ஒன்றில் துப்பாக்கிச்சூடு :  பெண்ணொருவர் காயம், சந்தேக நபர் கைது...........

(எம்.எஸ்.எம்.நூர்தீன்) காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் இன்று (14) வெள்ளிக்கிழமை முற்பகல் வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்தனர்.

இந்த வீட்டில் வசித்த இளம் பெண் ஒருவர் காயஙகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்,

முற்பகல்  வேளை குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கியுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு  தப்பிச் சென்றுள்ளார்.

சித்தீக் சிபானியா (வயது32)  என்பவரே இச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதுடன், இப் பெண்ணின் கணவர்  அவுஸ்ரேலியாவில் இருப்பதாகவும்,  பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்ட  காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.வி‌ கமராக்களையும் சோதனை செய்து சந்தேக நபர் அடையாளப்படுத்தப்பட்டதையடுத்து சந்தேக நபரை தேடிய  பாதுகாப்பு துறையினர் இன்று மாலை ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கிலுள்ள வீடொன்றில் வைத்து சந்தேக நபரை  கைது  செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் வீட்டில்  தடவியல் பொலீஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து  துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 


Comments