ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு ஆற்றிய விசேட உரை....................

 ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு ஆற்றிய விசேட உரை....................

ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கை அன்னையை மீட்டுத் தருவதாக அன்று நான் வாக்குறுதி அளித்தேன். குழந்தையைப் பத்திரமாக மீட்டு வந்திருக்கிறேன். இப்போது, குழந்தையைக் காக்க எந்த ஆதரவும் தராத குழுக்கள் குழந்தையின் உரிமையைப் பெறப் போராடுகின்றனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்
நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்று காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இன்று பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டது.அத்தோடு, அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இது நற்செய்தியாகும்.
சிலர் ஜனாதிபதி பதவிக்காக கடுமையாக பாடுபடும் நிலையில் நான் நாட்டிற்காக பாடுபட்டு வருகிறேன். அவர்கள் தமக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றிக் கனவு காணும் போது, நாட்டின் அபிவிருத்தியைப் பற்றிக் கனவு காண்கிறேன்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் இலங்கைத் தாயை ஆபத்தான கயிற்றுப் பாலத்தின் ஊடாக கொண்டு வர முடிந்ததுள்ளது. கடினமான நிலைமையில் குழந்தையை பாதுகாப்பதற்கு அஞ்சி எந்த ஆதரவையும் வழங்காத நபர்கள், குழந்தை கயிறு பாலத்தை கடக்கும் முன்பே குழந்தையின் உரிமையைக் கேட்டு போராடுகின்றனர்.
கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று முத்திரை குத்தப்பட்ட ஒரு நாட்டினால் இரண்டு வருடங்களில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது பாரிய வெற்றியாகும்.
நாட்டின் எதிர்காலப் பயணத்தை சீர்குலைக்க சிலர் முயன்றாலும், எதிர்காலத்தில் ஒருநாள், நாட்டைக் காட்டிக் கொடுத்தமைக்காக, தங்களின் பிள்ளைகளின் முன்னால் வெட்கப்பட நேரிடும்
​மேலும் 2022 ஆம் ஆண்டில், எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2வீதத்தினை, வெளிநாட்டுக் கடன் செலுத்த செலவிட வேண்டியிருந்தது. 2027 முதல் 2032 வரையான காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 இற்கும் குறைவான தொகையே கடன் செலுத்த ஒதுக்க வேண்டியிருக்கும்
இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நாடு என்று உத்தியோக பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் எங்களுடனான கொடுக்கல் வாங்கல்கள் போன்று வெளிநாட்டுக் கடன் உதவியோடு நம் நாட்டில் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுடன், இந்தக் கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன், அந்த அனைத்துத் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்
கடன் வழங்குநர்களுடன் இலங்கை கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பிரதமர், ஜூலை 02ஆம் திகதி நடைபெறும் விசேட பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிப்பார் என்றும், அந்த ஒப்பந்தங்களை அங்கீகரிக்க ஒத்துழைக்குமாறு நாட்டை நேசிக்கும் அனைத்துப் பாராளுமன்றப் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதே வேளை கடந்த காலங்களில் கடினமான பாதையில் சென்ற நாடு, முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட அனைத்துத் தரப்பினர்களுக்கும் மற்றும் பொறுமையுடன் செயற்பட்ட நமது நாட்டின் பெரும்பாலான மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது விசேட உரையில் நன்றி தெரிவித்தார்.
அண்மைய வரலாற்றில் பொருளாதார புதைகுழியில் விழுந்த உலகின் எந்த நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வாறான நிலையை அடைந்ததில்லை.
நாடு எதிர்நோக்கும் சவால்களை உண்மையாகப் புரிந்துகொண்டு அவற்றிற்கு நடைமுறை தீர்வுகளை வழங்கி, முடிவுகளைக் காட்டிய என்னுடன் சேர்ந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வீர்களா?
இல்லையேல் இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாத மற்றும் அதிகாரத்திற்காக இருட்டில் தத்தளிக்கும் குழுக்களுடன் இணைவதா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Comments