களுவாஞ்சிகுடியில் சர்வதேச தாய்மொழி தினம் - 2024.............
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் (27)ம் திகதி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
தாய்மொழிக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறி, உலகின் அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையை பாதுகாக்கும் வகையில் பெப்ரவரி 21ம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக ( International Mother Language Day) ஐ.நாவின் யுனெஸ்கோ 1999ம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. இதனையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து பெப்ரவரி 21ம் திகதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகின்றது.
"நமது தாய்மொழியை நினைத்து நாம் பெருமிதம் அடையலாம். ஆனால் இன்னுமொருவருடைய மொழியை சிறுமைப்படுத்துவது மனித அறமாகாது" என்பது தாய்மொழிகள் தினம் சொல்லும் செய்தி.
இதன்போது "நம் தாய்மொழியை பேணுதல் ஒரு பன்முக நோக்கு" எனும் தலைப்பின் கீழ் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதி பதிவாளர் சஞ்சீவி சிவகுமார் அவர்களினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டதுடன், பிரதேச கலைஞர்களின் பாடல்கள் மற்றும் கணேஷா கலைக்கழக மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் கதிரவன் பட்டிமன்ற பேரவை வழங்கிய 126வது சிறப்பு பட்டிமன்றம் "தற்காலத்தில் தமிழ்மொழி வளர்கிறது...... தற்காலத்தில் தமிழ்மொழி தளர்கிறது" எனும் தலைப்பில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
Comments
Post a Comment