மட்டக்களப்பில் கன்னியாஸ்திரிகள் மடத்தில் பாரிய திருட்டு; சந்தேகநபர் கைது...........

 மட்டக்களப்பில் கன்னியாஸ்திரிகள் மடத்தில் பாரிய திருட்டு; சந்தேகநபர் கைது.........

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியந்தீவு சென் ஜோசப் கன்னியாஸ்திரிகள் மடத்தில் உள்ள நான்கு கன்னியாஸ்திரிகளின் விடுதிகளில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த நான்கு விடுதிகளில் இருந்து நான்கு கையடக்க தொலைபேசிகள் ஏ.ரி.எம் அட்டை, அமெரிக்க டொலர், மற்றும் இந்திய ரூபாய்கள், இலங்கை நாணயம் உட்பட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக 43 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு ஐபோன் உட்பட 4 கையடக்க தொலைபேசிகள், 20,500 ரூபாய் இலங்கை நாணயம், 50 அமேரிக்க டொலர், இந்திய ரூபாய்கள் 200 என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி பெறப்பட்ட ஒன்பதாயிரத்தி ஐநூறு ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கன்னியாஸ்திரிகள் மடத்தில் கூலி வேலை செய்த நபரே இவ்வாறு இரவு நேரத்தில் மடத்திற்குள் நுழைந்து கன்னியாஸ்திரிகள் தங்கும் நான்கு அறைகளிலும் இருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முரண்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments