மட்டக்களப்பு நாவலடி கனிஸ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா..........

 மட்டக்களப்பு நாவலடி கனிஸ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா..........

மட்டக்களப்பு நாவலடி கனிஸ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு (28) திகதி பாடசாலையின் அதிபர் பூ.கமலநாதன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்.
பிரதம அதிதி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களின் வருகையைத் தொடர்ந்து பூமாலை அணிவித்து அதிதிகள் வரவேற்க்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றி இறை வணக்கத்துடன் பரிசளிப்பு விழா ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபெற்றினைப் பெற்ற மாணவர்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் மற்றும் தவணைப் பரீட்சைகளில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள் என அனைத்து மாணவர்களுக்கும் பிரதம அதிதி உள்ளிட்ட கௌரவ அதிதிகளின் கரங்களால் சான்றிதழ்களும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அத்தோடு பாடசாலை மாணவர்களின் கல்விக்காக பொறுப்புடன் கடமையாற்றிய குறித்த பாடசாலையின் ஆசிரியர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு பாடசாலை சமூகம் சார்பாக பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த பாடசாலையில் ஆரம்பக் கல்வியினை பயின்று நாவலடி பகுதியில் இருந்து மருத்துவராக தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவர் ஒருவரை இதன் போது கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னால் மாகாணசபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் உதவி பணிப்பாளர் கலாநிதி உ.யுவநாதன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்ததுடன், ஏனைய பாடசாலை அதிபர்கள், ஊர் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

Comments