மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.ஜே.முரளிதரன் கடமைகளை பொறுப்பேற்பு............

 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.ஜே.முரளிதரன் கடமைகளை பொறுப்பேற்பு............

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் இன்று (18) திகதி தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
குறித்த நியமனமானது கடந்த (13) திகதி கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக ஆகியோர் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட வின்சன்ட் பிரான்சிஸ் மற்றும் மேரிஆன் ஜோசப் ஆகியோருக்கு 02வது பிள்ளையாக பிறந்த வின்சன்ட் பிரான்சிஸ் ஜஸ்ரினா யுலேக்கா யாழ்.திருக்குடும்ப கன்னியா் ஆங்கில பாடசாலையில் ஆரம்பக்கல்வி தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்று, தனது உயர் கல்வியை சென்னை பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து விஞ்ஞானமாணி (தாவரவியல்) பட்டத்தினை 1989 ஆம் ஆண்டு முதற்தரத்திலேயே சித்திபெற்ற ஒரு சிறந்த ஆளுமையுள்ள இலங்கை மாணவியாகத் திகழ்ந்ததுடன், 2013 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு திருகோணமலையில் வசித்த தேசமாண்ய ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டில் இணைந்த வடகிழக்கு மாகாண திருகோணமலை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தில் பட்டதாரிப் பயிலுனராக இணைக்கப்பட்ட இவர் 1991 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் முதலாவது நியமனமாக, இணைந்த வடகிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு இணைந்த வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளராகவும், 2007 ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாண காணி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிருவாகம்), சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும், சிறுவா் நன்னடத்தை திணைக்களத்தின் மாகாண ஆணையாளராகவும், மோட்டாா் போக்குவரத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளதுடன், 2013 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு உள்வாங்கப்பட்ட இவர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளா் (நிருவாகம்), மாகாண சபைச் செயலாளர், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளா், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளா், பிரதிப் பிரதம செயலாளா் (ஆளணி மற்றும் பயிற்சி) போன்ற செயலாளர் பதவிகளிலும் கடமையாற்றி வந்துள்ளார்.
பல்வேறுபட்ட மாகாண திணைக்களங்களின் தலைமைப் பதவிகள் மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர் பதவிகளில், பதவி வகித்த காலப்பகுதியில் அத்துறைசார்ந்த திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களில் நிலவுகின்ற குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ததுடன் அதன் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்து பல்வேறு அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் பாரிய பங்களிப்பைச் செய்தவராவார். அத்துடன் கிழக்கு மாகாண சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான நலன்புரிச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.
32 வருடகாலமாக இலங்கை நிருவாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், கடந்த 2022.01.07 ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையேற்று பதவி வகித்து வந்த நிலையில், கடந்த 13.12.2023 திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளதுடன், சமய அனுஸ்டானத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் புதிய மாவட்ட அரசாங்க அதிபரின் குடும்பத்தினர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments