மட்டக்களப்பில் தபால் சேவை பாதிப்பு: தபாலக ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்........

 மட்டக்களப்பில் தபால் சேவை பாதிப்பு: தபாலக ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்........

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. தபால் நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாக தபால் நிலையங்களுக்கு சேவைகளைப்பெறவந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதை காணமுடிந்தது.

நீதிமன்ற கட்டணங்கள் கட்டுவோர், பரீட்சைக்கட்டணங்களை கட்டுவோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

நுவரேலியா தபாலகம் விற்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்த பதாகைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நவம்பர் 8, 9, 10 ஆகிய 3 நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments