மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து கடற்கரைக்கு வந்த காட்டு யானைகள்....

 மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து கடற்கரைக்கு வந்த காட்டு யானைகள்....

மட்டக்களப்பு - படுவாங்கரைப் பகுதியிலிருந்து வாவியில் நீந்தி எழுவாங்கரைப் பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் உட்புகுந்துள்ளதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த காட்டு யானைகள் இன்று (03) அதிகாலை சுமார் 3 மணியளவில் மட்டக்களப்பு வாவியை நீந்தி களுதாவளைக் கிராமத்திற்குள் உட்புகுந்துள்ளன.
இவ்வாறு கிராமத்திற்குள் உட்புகுந்த இரு காட்டு யானைகள் தோட்டங்களையும் வீட்டு வேலிகளையும், நாசம் செய்துவிட்டு கடற்கரைப் பகுதியூடாக சென்று தேற்றாத்தீவு கடற்கரையில் அமையப்பெற்றுள்ள சவுக்கு பற்றை காட்டினுள் புகுந்துள்ளன.
பின்னர் பொதுமக்கள் ஒன்றிணைந்து காட்டு யானைகளை அப்புறப்படுத்துவதற்கு முனைந்தபோது அதற்கு இடம்கொடுக்காத யானைகள் மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள தோட்டங்களுக்குள் உட்புந்துள்ளன.
எனினும் காட்டு யானைகள் படுவாங்கரைப் பகுதியிலிருந்து எவ்வாறு கடற்கரையை அண்டியுள்ள எழுவாங்கரைப் பகுதிக்கு உட்புகுந்ததோ அதே பாதையூடாக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments