கல்குடா கல்வி வலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 19 அதிபர்களுக்கும் மகத்தான வரவேற்பு......

 கல்குடா கல்வி வலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 19 அதிபர்களுக்கும் மகத்தான வரவேற்பு......

மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் இலங்கை அதிபர் சேவைக்காக கல்குடா கல்வி வலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 19 அதிபர்களுக்கான வரவேற்பு மற்றும் பாராட்டு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
வலயக்கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான சிவசங்கரி கங்கேஸ்வரன், க.ஜெயவதனன், எஸ்.தட்சணமூர்த்தி, கணக்காளர் வி.கணேசமூர்த்தி, நிருவாக உத்தியோகத்தர் எச்.எம்.எம்.பாறுக், நிதி உதவியாளர் ப.லிங்கேஸ்வரன், பதவிநிலை உத்தியோகத்தர் ஐ.எல்.அஸ்ரப் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வரவேற்பு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் கல்குடா வலயக்கல்வி அலுவலக பிரதான வாயிலில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
வலயக்கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூபன் தனது தலைமையுரையில் 'பரீட்சையை வைத்து தீர்மானித்தாலும் சரி, நேர்முகப் பரீட்சையை வைத்து தீர்மானித்தாலும் சரி புதிய பதவிகள் வருவதென்பது அது இயற்கையாகத் தீர்மானிக்கப்பட்டது.
உண்மையாக உங்களுக்குப் பொருத்தமானது, அதற்கு நீங்கள் பொருத்தமானவர்கள், தகுதியானவர்கள் என்ற வகையிலேயே அமையும்' எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் நாம் வந்திருக்கிற தொழிலை சம்பளத்துடன் தொடர்புபடுத்தி யோசிக்கிறோமே தவிர குறித்த தொழிலின் அந்தஸ்து, தொழிலின் ஊடாக சமூகத்திற்கு செய்யப் போகின்ற கைங்கரியங்கள் தொடர்பில் சிந்திப்பது குறைவு எனக் குறிப்பிட்டதுடன் நீங்கள் அவ்வாறானவர்கள் அல்ல. கஸ்டப்பிரதேசங்களில் கல்விக்காக அரும்பாடு பட்டவர்கள். நீங்கள் அனைவரும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உச்சமாக உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட புதிய அதிபர்கள் தமது அனுபங்களை பகிர்ந்து கொண்டதுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தமது பூரண பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.



Comments