இப்படியும் நல்லுள்ளம் இக்காலத்திலும்...

 இப்படியும் நல்லுள்ளம் இக்காலத்திலும்...

வீதியில் கண்டெடுத்த தங்க மாலை மோதிரத்தை பொலிசாரிடம் ஒப்படைத்த  மனிதம் மிக்க மனிதர்.

களவு, கொள்ளை, பிறரின் உடமை அபகரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்ற இக்காலத்தில், வீதிகளில் கண்டெடுக்கப்படும் பெறுமதியான தனக்கு உரித்தில்லாத பொருட்களை பொலிசாரிடம் ஒப்படைக்கும் மனிதர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இவ்வாறான சிறப்பு சம்பவமொன்று  (16) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பஸ் நிலையத்தின் அருகாமையில் நடந்து சென்ற, கோயில் வீதி திருக்கோவில் -1 இனை சேர்ந்த அன்ரி மலேரியா ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் கணபதிப்பிள்ளை கார்த்திகேசு என்பவர் மாலை ஒன்றினையும் மோதிரம் ஒன்றினையும் கண்டெடுத்துள்ளார்.

இதன் போது அருகில் இருந்த இன்னுமொருவர் அது தன்னுடைய நகை என கூறி பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும், அதனை உரியவரிடமே ஒப்படைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இருந்த போதிலும் குறித்த நபர் அந்த மாலையினை தனது என பெற்றுக்கொண்ட நிலையில் மாலை மற்றும் மோதிரத்தை கண்டெடுத்த கார்த்திகேசு அக்கரைப்பற்று பொலிசாரிடம் விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.பி.விஜயதுங்கவின் ஆலோசனைக்கு அமைவாக பெருங்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசிப் தலைமையிலான பொலிசார் மாலையினை பொறுப்பேற்றதன் பின்னர் மாலை மோதிரத்தை ஒப்படைத்த கார்த்திகேசுவை பாராட்டினர்.

இதே நேரம் அக்கரைப்பற்று பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர் ஆறுமுகம் அசோக்க அவர்களும் சம்பவ இடத்திற்கு சென்று மாலையினை ஒப்படைத்தவருக்கு நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டார்.

இக்காலத்தில் இப்படியும் மனிதர்கள் வாழ்கின்றார்கள் பாராட்டுகின்றோம்.

Comments