களுவாஞ்சிகுடியில் மியோவாக்கியா முறை காடு வளர்ப்பு திட்டத்தின் 4 செயற்திட்டம் ஆரம்பம்.......

 களுவாஞ்சிகுடியில் மியோவாக்கியா முறை காடு வளர்ப்பு திட்டத்தின் 4 செயற்திட்டம் ஆரம்பம்.......

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மியோவாக்கியா முறையிலான காடு வளர்ப்பு திட்டத்தின் நான்காவது செயற்திட்டமானது இன்றைய தினம் (17) பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் எருவில் கிராம சேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உலகத்திலே அதிக எண்ணிக்கையான காடுகளை உருவாக்கியதன் மூலம் நோபல் பரிசுக்கு சமமான புளுபிளானட் எனும் விருதினை பெற்றவரான ஜப்பான் நாட்டு இயற்கை விஞ்ஞானி மியோவாக்கி ஆவார். இதன் காரணமாகவே இவரின் பெயரின் மூலம் அழைக்கப்படுகின்றது.
குறுகிய நிலப்பரப்பில் காடுகளை உருவாக்கும் ஒரு அற்புதமான செயற்பாடு. இயற்கையின் படைப்பில் மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளும் போட்டி, பொறாமை போன்ற குணங்களை விடுத்து ஒன்றுக்கொன்று உதவி தானும் வளர்ந்து உடனிருப்போரையும் வளரச் செய்யும் ஓர் அற்புதத்தை இங்கு காணலாம்.
கடந்த 2019ம் ஆண்டளவில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவின் களுவாஞ்சிகுடி வடக்கு 01, களுவாஞ்சிகுடி தெற்கு மற்றும் மாங்காடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் தற்போதைய நிலை தொடர்பாக ஆவணப்படமும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் றியாஸ் அஹமட் (உயிரியல் விஞ்ஞானத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்), உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதேச சபை செயலாளர் எஸ்.அறிவழகன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், எருவில் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்பிள்ளை பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிகழ்வின் போது மியோவாக்கியா காடுவளர்ப்பு தொடர்பான அலுவலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட விழிப்புணர்வு நாடகமானது கலந்துகொண்டிருந்த அனைவரினதும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments