வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருடப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு - நால்வர் கைது

 வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருடப்பட்ட  4 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு - நால்வர் கைது

அண்மைக்காலமாக சூட்சுமமாகத்திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர்கள் நால்வர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இம்முறைப்பாடுகளுக்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஏ.எம்.நஜீம் தலைமையிலான குழுவினர் புலன்விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சந்தேக நபர்களைக் கைது  செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நிந்தவூர் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டனர். 

இவ்வாறு கைதான மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை, பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 4 சந்தேக நபர்களும் அவர்கள் வசமிருந்து திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும்   புதன்கிழமை (4) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  23, 25, 26, 46 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன், சந்தேச நபர்களில் ஒருவர் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பிரித்து உதிரிப்பாகங்களை விற்பனை செய்பவர் என்பதும் பொலிஸ் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்டு பாவிக்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Comments