விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு..............

 விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு..............

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் யாப்பு திருத்தம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் யாப்பை திருத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் மற்றும் செயலாளர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த மனு பரிசீலிக்கப்படும் வரை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் யாப்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சமத் மொரேஸ் ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய கிரிக்கெட்டின் யாப்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் யாப்பு எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த விதிகளுக்கு அப்பாற்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் யாப்பை திருத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள மனுதாரர்கள், இது சட்டவிரோதமான மற்றும் தன்னிச்சையான செயல் எனவும், குறித்த யாப்பை திருத்துவதற்கு விளையாட்டு அமைச்சருக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான பரிசீலனைக்கு எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Comments