கனேடிய விசா சேவை நிறுத்தம்.............

 கனேடிய விசா சேவை நிறுத்தம்.............

இந்தியா கனடா இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் கனேடியர்களுக்கு விசா சேவைகள் வழங்குவது காலவரையின்றி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் வந்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து தூதரகப் பாதுகாப்பை உறுதி செய்வதாக கனடா தரப்பில் கூறிய நிலையில், இந்தத் தகவல் வந்திருக்கிறது.

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியது பதற்ற நிலைக்கு வித்திட்டது. இந்த சர்ச்சையின் காரணமாக இந்தியா – கனடா இடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளன.

இந்நிலையில் கனடியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி இருப்பதாக குறித்து கனடாவில் விசா விண்ணப்ப மையங்களை நடத்தும் பி.எல்.எஸ். (B.L.S) இன்டர்நேஷனல் நிறுவனம் தனது இணையதளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இருப்பினும் விசா சேவைகள் நிறுத்தப்படுவது குறித்த முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்திய மிஷனின் முக்கிய அறிவிப்பு: ''நடைமுறை காரணங்களால், 21 செப்டம்பர் 2023 முதல், இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன'' என்று பி.எல்.எஸ். இன்டர்நேஷனல் நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய அதிகாரி ஒருவர் இந்த விசா சேவை இடைநிறுத்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். கோவிட் -19 பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு இந்தியா விசா சேவையை நிறுத்துவது இதுவே முதல் முறை.

இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக கனடாவில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு புதன்கிழமை இந்தியா அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments