கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்......

 கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்......

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (19) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது.

தானாக தோற்றம்பெற்ற ஆலயமாகவும் கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மஹோற்சவத்தையொட்டி கடந்த மூன்று தினங்களாக சாந்தி கர்ம கிரியைகள் இடம்பெற்றுவந்தன. இன்று காலை மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட பூசை இடம்பெற்றது. கொடிச்சீலை ஆலயத்தினை சூழ வலம் வந்து,கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றன.

வேதபாராயணத்துடன் மேள, நாதஸ்வர, இசை முழங்க, மணியோசைகளின் மத்தியில், பக்தர்களின் அரோகரா ஓசையுடன் கொடியேற்றம் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தம்பத்துக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்றதுடன் பூசைகள் இடம் பெற்று சுவாமி உள்வீதி வலம்வரும் நிகழ்வு இடம்பெற்றது.






Comments