செல்வராஜாவின் "மட்டக்களப்பில் பொலிவு பெறும்பொதுசன நூலகம்" நூல் வெளியீட்டு விழா!!

 செல்வராஜாவின் "மட்டக்களப்பில் பொலிவு பெறும்பொதுசன நூலகம்" நூல் வெளியீட்டு விழா!!

சந்திரோதயம் கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் கலை இலக்கிய வட்டம் ஆகியன இணைந்து நடாத்தும் நூலியலாளர் என்.செல்வராஜாவின் "மட்டக்களப்பில் பொலிவு பெறும் பொதுசன நூலகம்" நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பில் இடம்பெற்றது.
எழுத்தாளரும் அதிபருமாகிய ச.மணிசேகரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் (15) இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும் கௌரவ விருந்தினராக கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார்.
நூல் அறிமுகத்தினை கவிஞர் த.உருத்திராவும், நூல் நயவுரையினை சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் அவர்களும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகரும் இலங்கை நூலகர் சங்க துணைத் தலைவருமான செ.சாந்தரூபன் அவர்களும் நிகழ்த்தினர். இந் நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் பூ.சீவகன் (பிரதம ஆசிரியர் அரங்கம்) சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நூல் வெளியீட்டினை தொடர்ந்து நூலின் முதல் பிரதியினை மூத்த எழுத்தாளர் கவிஞர் செ.குணரெத்தினம், ஆய்வாளர் என்.சரவணன் (நோர்வே), கலாநிதி து.பிரதீபன் (நூலகர்) ஊவாவெல்லச பல்கலைக்கழகம், கலாநிதி சு.சிவரெத்தினம் (சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்) பேராசிரியர் பாரதி கென்னடி (பணிப்பாளர் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம்), பேராசிரியர் பாலசுகுமார் (லண்டன்), பேராசிரியர் சி.சந்திரசேகரம் (கிழக்குப் பல்கலைக்கழகம்), எந்திரி என்.சிவலிங்கம் (ஆணையாளர், மட்டு. மாநகரசபை) ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
ஏற்புரையினை நூலியலாளர் என். செல்வராஜா (நூலாசிரியர்) நிகழ்த்தவுள்ளதுடன், நிகழ்ச்சித் தொகுப்பினை கி.சிறிகாந்தன் மற்றும் செல்வி.ம.பவதாரணி ஆகியோர் இணைந்து வழங்கியிருந்தனர்.

Comments