சுவாமி விபுலானந்த அடிகளாரின் 76 வது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு............

 சுவாமி விபுலானந்த அடிகளாரின் 76 வது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு..........

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 76 வது சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று (19) திகதி மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு - கல்லடி உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள உலகின் முதற்தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சமாதியில் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா மஹராஜ், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளர், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா மற்றும் சிவானந்தா வித்தியாலயம் மற்றும் விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றின் அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுவாமிகளின் சமாதிக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா மஹராஜ் அவர்களினால் தீபாராதனை நிகழ்த்தப்பட்டதுடன், ''வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ'' எனும் பாடலும் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் மு.பவளகாந்தனின் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு சுவாமியின் சிரார்த்த தின நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவ வளாகத்திலும் இடம்பெற்றிருந்தது. இதன்போது சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள சுவாமியின் திருவுருவச்சிலைக்கு நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி புளோரன்ஸ் கென்னடி தலைமையில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சிரார்த்த தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.
அத்தோடு சுவாமியின் திருவுருவத்தை தாங்கிய ஊர்வலமானது மணி மண்டப வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதிவழியாக நாவற்குடாவை அடைந்து அங்கிருந்து பழைய கல்முனை வீதி வழியாக கல்லடி மணிக்கூட்டுக்கோபுரத்தை அடைந்து மீண்டும் சிவானந்தா வித்தியாலயத்தை வந்தடைந்ததும் சுவாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Comments