48 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு நியமனம் - 24 மணிநேரத்தில் கிழக்கு மாகாண ஆளுனரின் அதிரடி நடவடிக்கை...

 48 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு நியமனம்- 24 மணிநேரத்தில் கிழக்கு மாகாண ஆளுனரின் அதிரடி நடவடிக்கை...

கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தமை குறித்து தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அவர்களுக்கு 24 மணித்தியாலங்களுக்குள் நியமனங்ளை வழங்கி வைத்ததாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருந்த ஆங்கில டிப்ளோமா பட்டதாரிகள், கிழக்கு மாகாணத்தின்  உரிய அதிகாரிகளிடம் தமது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும் அவர்களுக்கு நியமனத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும், இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் தனது கவனத்துக்கு நேற்று (09) கொண்டுவரப்பட்ட போது  அதிரடி உத்தரவின் பேரில் அவர்களுக்கு  நியமனம் (10) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் போது நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கருத்து தெரிவித்த போது தாங்கள்  6 வருடங்களுக்கு மேல் ஒவ்வொரு நாளும்  இந்த நியமனத்திற்காக காத்திருந்ததாகவும், இந்த நியமனம் எமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், 'எமக்கு பின்னர் ஆசிரியை பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு கூட நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில், எமது நியமனம் குறித்து நாம் கடந்த கால ஆளுநர்கள், அரசியல்வாதிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு வெற்றி பெற்றும் எமக்கு நியமனம் வழங்கப்படுவில்லை, தொடர்ந்து இழுத்தடிப்புகள் இடம்பெற்று வந்தது. ஆனால் தற்போது கிழக்கு மாகாண ஆளுனரின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் எமக்கு  நியமனங்களை வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த எமது குடும்பம் இந்த நியமனத்தின் மூலம் இனி ஓரளவு மூச்சுவிடும் எனவும், இந்த நியமனம் எமது வாழ்க்கைக்கு அர்த்தம் பெற்று தந்துள்ளது எனவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பிரதம செயலாளர் ரத்நாயக்க, ஆளுநர் செயலாளர் மதநாயக்க, பிரத்தியேக செயலாளர் அணில் விஜயஶ்ரீ, கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர்  கோபாலரட்ணம், சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி முரளிதரன் உட்பட அரச அதிகாரிகள் மற்றும் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

Comments