மட்டக்களப்பு மாங்காட்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு...

 மட்டக்களப்பு மாங்காட்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு...

மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு எனும் கிராமத்தில் வியாழக்கிழமை (08.03.2023) மாலை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நஞ்சுத்தன்மையான கடல்மீனை சமைத்து சாப்பிட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குறித்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் 27 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும், 50 வயதுடைய பெண், 19 வயதுடைய ஆண், மற்றும் மூன்றரை வயதுடைய ஆண்பிள்ளை ஆகிய மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 50 வயதுடைய பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேத்தை என்ற மீன்;

இவ்வாறு உயிரிழந்தவர் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாவார். வியாழக்கிழமை பிற்பகல் கடற்கரையில் மீனவர்களின் வலையில் சிக்கிய குறித்த விசத்தன்மையான மீனை எடுத்து வீசியுள்ளனர்.

இதனை குறித்த குடும்பத்தினர் பொறுக்கியுள்ளதாகவும்,  இது சமைப்பதற்கு உகந்த மீன் இல்லை அதனை எடுக்க வேண்டாம் என மீனவர்கள் தெரிவித்ததையும் அவர்கள் பொருட்படுத்தாது அந்த மீனை அவர்கள் எடுத்துச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குடும்பத்தினர் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியதையடுத்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடல் மீனினமான பேத்தை என்ற மீனை அவர்கள் மதிய உணவுக்காக சமைத்து உட்கொண்டதன் காரணமாகவே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பகுதி பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.


Comments