மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் - பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு அனுமதி!!

 மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் - பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு அனுமதி!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் ஆணி மாதத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் (27) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்களது பங்கேற்புடன் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
குறிப்பாக இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் இம்மாவட்டத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம் (டெங்கு ஒழிப்பு), சுற்றாடல், மீன்பிடி உட்பட்ட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் உடன் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.
குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிக்குழுவினர் உள்ளிட்ட உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
அத்தோடு மாவட்டத்தின் மேச்சற்தரை மற்றும் மகாவலி தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோரினால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Comments