ஆரையம்பதி இலங்கை வங்கியில் பாரிய கொள்ளை முயற்சி : வங்கி முகாமையாளரின் சமயோசித செயற்பாட்டால் முறியடிப்பு

 ஆரையம்பதி இலங்கை வங்கியில் பாரிய கொள்ளை முயற்சி : வங்கி முகாமையாளரின் சமயோசித செயற்பாட்டால் முறியடிப்பு....

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இலங்கை வங்கியை உடைத்து கொள்ளையிடும் பாரிய முயற்சி வங்கி முகாமையாளரின் துரித நடவடிக்கையாலும்  சமயோசித செயற்பாட்டினாலும் தடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (31) வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் குறித்த வங்கியை உடைத்து வங்கியினுள் நுழைந்த கொள்ளையர்கள் பிரதான பாதுகாப்பு பெட்டகம் (லொக்கர்) வைக்கப்பட்டிருக்கும் அறையை உடைத்து உள்ளே நுழைந்து லொக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். 

இதன்போது, வங்கியின் முகாமையாளர் லொக்கரின் கைப்பிடியில் தனது தொலைபேசி இலக்கத்தை இணைப்புச் செய்திருந்தமையால் லொக்கரைத் தொட்டவுடன் வீட்டிலிருந்த தனது தொலைபேசியில் எச்சரிக்கை மணி ஒலிக்க துரிதமாகச் செயற்பட்ட முகாமையாளர் உடனடியாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸாரை அழைத்துக் கொண்டு வங்கிக்கு வந்தபோது கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த தடையவியல் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வங்கியின் சில பகுதிகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments