மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு!!

 மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தில் அரச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தினுடாக அரிசியாக்கப்பட்டு வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படுகின்றமை தொடர்பாக அரசாங்க அதிபர் அவதானம் செலுத்தினார்.
அத்துடன் ஆசிரியர் கலாசாலையில் இடம் பெறவுள்ள நடமாடும் சேவையில் அதிகளவான சேவை பெறுனர்களை உள்வாங்க கவனம் செலுத்தப்பட்டதுடன் அதிகாரிகளின் கள விஜயங்களின் போது எதிர்நோக்கும் சவால்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் அரச காணி, சமுர்த்தி, கர்ப்பிணி பெண்களுக்கான சத்துணவு வழங்கள், வெசாக் வைபவத்தினை நடாத்துதல், மற்றும் கால்நடை வளர்ப்பு, முன்பள்ளி சிறார்களுக்கான காலை உணவு வழங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வின்போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீ காந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பதவி நிலை அதிகாரிகள் என உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Comments