மட்டக்களப்பு - மண்முனை மேற்கு விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ...

 மட்டக்களப்பு - மண்முனை மேற்கு விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ...

விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் நவரெத்தினம் நவேந்திரகுமார் தலைமையில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட பின்னர் நிகழ்வுகள் இடம்பெற்றது.
விளையாட்டு நிகழ்வில் மாணவர் அணிவகுப்பு, ஒலிப்பிக் தீபம் ஏற்றல், சத்தியப்பிரமாணம், அணிநடை, சிறுவர் மெய்வலுனர் விளையாட்டுக்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான விளையாட்டுக்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டுக்கள், உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடைப் போட்டி மற்றும் அஞ்சலோட்டம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
2023 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் வள்ளுவர் இல்லம் வெற்றிபெற்று சம்பியனாக மகுடம் சூட, கம்பர் இல்லம் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
அத்தோடு இல்ல அலங்கரிப்பில் வள்ளுவர் இல்லம் வெற்றிபெற்றதுடன், அனைத்து போட்டியிலும் சாதித்த வள்ளுவர் இல்ல மாணவன் தி.லக்சன் இந்த வருடத்திற்காகன சிறந்த வீரனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்ட அதே வேளை போட்டிகளில் வெற்றிபெற்ற பழைய மாணவர்கள், பொற்றோர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு ஞாபகார்த்த சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இறுதியாக வருகை தந்த அதிதிகளால் பெற்றிபெற்ற இல்லங்களுக்கு வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.
விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) எஸ்.மகேந்திரன், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலக கணக்காளர் ஆர்.சிவகுமார், வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் மற்றும் விளாவட்டவான் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










Comments