வேட்புமனு தாக்கல் செய்த அரச பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் மாத்திரம் செலுத்தப்படும் ?

வேட்புமனு தாக்கல் செய்த அரச பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் மாத்திரம் செலுத்தப்படும் ?

இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்லில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச பணியாளர்களுக்கு அடிப்படை வேதனத்தை மாத்திரம் செலுத்துவது பொருத்தமானதாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இம்மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு திகதியிடப்பட்டிருந்தது. எனினும் அது பின்னர் பிற்போடப்பட்டது. இதன்படி, அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் தாமதமடையும் காலம் வரை அரச சேவையாளர்களுக்கு அடிப்படை வேதனத்தை மாத்திரம் செலுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 3 ஆயிரம் அரச பணியாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு வேதனமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேர்தல் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளமையுடன் பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Comments