சர்வதேச மகளிர் தின நிகழ்வும் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் 2023:காத்தான்குடியில்-Battieye.blogspot.com

 சர்வதேச மகளிர் தின நிகழ்வும் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் 2023:காத்தான்குடியில்-Battieye.blogspot.com

2023 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் "அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வுவானது (08)ம் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டார்
கௌரவ அதிதிகளாக காத்தான்குடி தள வைத்தியசாலை அத்தியட்சகர் DR.ஜாபிர், மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சிறுதொழில் முயற்சி பிரிவு, மாவட்ட செயலகம், மட்டக்களப்பு ரீ.நிலோசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளரினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாலர் பாடசாலை மாணவர்களின் நடனங்கள், கலைஞர்களின் கவிதைகள், நாடகங்கள், பாடல்கள் எனப் பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. கலை நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்: தற்போது பெண்கள் கல்வியில் மிகவும் முன்னேற்றத்தை கண்டு வருகின்றனர். எந்த துறையை எடுத்து கொண்டாலும் பெண்கள் முன்னிலையிலே உள்ளனர். எவ்வாறிருப்பினும் பெண்கள் வன்முறைகள் இடம்பெற்று கொண்டு தான் இருக்கிறது.அதிலும் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கான வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு அடுத்த நிகழ்வாக சிறு தொழில் முயற்சி பிரிவின் ஏற்பாட்டில் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு, வாங்குவோர் விற்போர் ஒருங்கிணைப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதில் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உத்தியோகத்தர்களால் பொருட்கள் கொள்வனவு இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினால் (CBO) வில் அங்கத்துவம் வகிக்கும் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஒருவருக்கு 10000/= பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
இந் நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments