வவுனியா வீடொன்றில் தாய், தந்தை மற்றும் 2 பிள்ளைகளின் சடலங்கள் மீட்பு:Battieye.blogspot.com
வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்காததை அடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறுவயதான இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான சிவபாதசுந்தரம் கௌசிகன் வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான 36 வயதுடைய கௌ.வரதராயினி, இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது 9), கௌ.கேசரா (வயது 3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிஸார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவம் வவுனியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
Comments
Post a Comment