சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் பெருமையுடன் வழங்கிய "ஈஸ்வரா நாட்டிய கானாஞ்சலி - 2023"

 சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் பெருமையுடன் வழங்கிய "ஈஸ்வரா நாட்டிய கானாஞ்சலி - 2023"

மகா சிவராத்திரியைச் சிறப்பிக்கும் வகையில் கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன, நாடகத்துறை பெருமையுடன் வழங்கிய "ஈஸ்வரா நாட்டிய கானாஞ்சலி - 2023" நிகழ்வு மட்டக்களப்பில் கோலாகலமாக இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு கடந்த (18) சனிக்கிழமை மாலை 7.00 மணி தொடக்கம் அதிகாலை 3.15 மணி வரை கலை, கலாசார நிகழ்வுகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக தென்னிந்திய வேதாரண்யம் சிவன்தேவஸ்தான பரம்பரையைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய சந்திர விஸ்வயோகரமணி அவர்களும், பிரதம விருந்தினராக கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிக, சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அங்குரன் டட்டா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன் அவர்களும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் வரவேற்புரையினை நடன, நாடகத்துறைத் தலைவர் கலாநிதி தாக்ஷாயினி பரமதேவன் அவர்கள் ஆற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஆசியுரையும், புஷ்பாஞ்சலி, சிவஸ்துதி, கீர்த்தனைகள், வர்ணம், நாட்டிய நாடகம், தில்லானா போன்ற பல்வேறு நடனங்கள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து யாழ் இந்திய துணைத் தூதரகம் மற்றும், இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் (ICCR) ஆகியவற்றின் அனுசரணையில் இந்தியாவில் இருந்து வருகை தந்த கலாநிதி அருந்ததி பகவதீஸ்வர ஐயர் அவர்களின் இசைக்கச்சேரியும் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பக்க வாத்தியக் கலைஞர்களாக வயலின் வைக்கியம், பத்மா கிருஷ்ணன் அவர்களும், மிருதங்கம் கலாநிதி ஜி.பாபு அவர்களும் கஞ்சிரா கடநாட அனந்த கிருஷ்ணன் அவர்களும் கடம் வாழப்பள்ளி கிருஷ்ணகுமார் அவர்களும் வருகைதந்திருந்தனர்.
இந்த நிகழ்வுகளில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன், இந்த நிகழ்வின் இணைப்பாளர்களாக நடன, நாடகத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.துஷ்யந்தி யூலியன் ஜெயப்பிரகாஷ் அவர்களும் வாய்ப்பாட்டுப் போதனாசிரியர் சுரேந்திரா நரேந்திரா அவர்களும் இணைந்து செயற்பட்டிருந்ததுடன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களும் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












Comments