மட்டக்களப்பில் செய்வினையை அகற்றுவதாக கூறி வீட்டு உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் பூசாரி!

 மட்டக்களப்பில் செய்வினையை அகற்றுவதாக கூறி வீட்டு உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் பூசாரி!

மட்டக்களப்பு நகர்பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் செய்வினை அகற்றுவதாக கூறி பணம் தங்க ஆபரணங்களை திருடிய போலி பெண் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொக்கட்டிச்சோலை கடுக்காய்முனையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் 22 ஆம் திகதி மட்டக்களப்பு நகர் பகுதியில் குடியிருந்து வாழ்ந்து வரும் அறிமுகமானவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் போது அந்த வீட்டின் பகுதியில் செய்வினை செய்திருப்பதாகவும் நான் நாககன்னி தெய்வம் ஆடி அதனை அகற்றி தருவதாக பெண் போலி பூசாரி தெரிவித்ததையடுத்து, வீட்டின் உரிமையாளரும் பூஜை செய்ய உடன்பட்டுள்ளார்.

சம்பவத்தினமான இரவு செய்வினையை அகற்றுவதற்கான பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது, பூஜை தட்டில் 60 ஆயிரம் ரூபா பணமும் தங்க ஆபரணங்கள் வைக்க வேண்டும் என கோரியதையடுத்து, அதனை வெள்ளை துணியால் கட்டியவாறு பூஜை தட்டில் வைத்து பூஜை நடைபெற்றுள்ளது.

இதன் பின்னர் போலி பெண் பூசாரி அந்த அறை கதவை மூடிவிட்டு கதவை 10 தினங்களுக்கு திறக்க கூடாது. அங்கு நாக கன்னி உலாவருவார் எனவும் 10 தினங்களின் பின்னர் நான் கதவை திறந்து வந்து துணியால் கட்டிவைக்கப்பட்ட பூஜை தட்டினை அவிழ்த்து தருவாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் போலி பெண் பூசாரி தெரிவித்த 10 நாட்கள் முடிந்ததும் அவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது, அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து, பூஜை அறைக் கதவை திறந்து சென்று துணியால் கட்டி வைக்கப்பட்ட பூஜை தட்டினை அவிழ்த்து பார்த்தபோது அங்கு தட்டில் வைக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவும் தங்க மோதிரத்தையும் பெண் பூசாரி திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இது தொடர்பாக பொலிஸாரிடம் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த பெண்ணை மட்டு. தலைமையக பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், இவர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பல வீடுகளில் செய்வினை இருப்பதாகவும் அதனை எடுத்து தருவதாக தெரிவித்து பணம் தங்க ஆபரணங்களை திருடிச் சென்றதாக 6க்கு மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Comments