நியாயம் கோரி நீதிமன்றம் செல்வேன் - இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் ஜஸ்வர்.....

 நியாயம் கோரி நீதிமன்றம் செல்வேன் - இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் ஜஸ்வர்.....

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் தனக்கு போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் நியாயம் கோரி நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் யூ. எல். ஜஸ்வர் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சு கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாக சபைத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ஜஸ்வர் போட்டியிடவிருந்தார்.

எனினும் அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் எனத் தெரிவித்து தேசிய சேவைகள் கால்பந்தாட்ட லீக் தலைவர் எம்.எப்.எம்.அப்லா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டுக் குழு, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜஸ்வர் பொருத்தமற்றவர் என சிபாரிசு செய்து எழுத்துமூல அறிக்கை ஒன்றை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையை அமைச்சர் அங்கீகரித்ததாகத் தெரிவித்து, யூ.எல்.ஜஸ்வர் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய எழுத்து மூலம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெள்ளியன்று பிற்பகல் வெளியிட்டிருந்தார்.

தேர்தல் குழு அதனை ஏற்க மறுத்ததாக தெரிவித்து தேர்தல் தினத்தன்று தேர்தல் நடைபெறும் மண்டபத்திற்கு தலைவர் பதவிக்கு போட்டியிடும் நோக்கத்துடன் ஜஸ்வர் சென்றிருந்தார். எனினும் தேர்தல் குழுவை அழைத்து விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் நடத்திய கலந்துரையாடலை அடுத்து தேர்தல் மண்டபத்திற்கு சென்ற தேர்தல் குழுவினர், தேர்தலில் போட்டியிட ஜஸ்வருக்கு தகுதியில்லை எனத் தெரிவித்து சபையை விட்டு வெளியேற்றினர். இது தவறான முடிவு எனவும் நியாயம் கோரி நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகும் தேர்தல் முடிவைடந்த பின்னர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

'விளையாட்டுத்துறை அமைச்சர்  (சனிக்கிழமை ) காலை 8.45 மணியளவில் சமர்ப்பித்த எழுத்துமூல உத்தரவை அடுத்தே தேர்தல் குழு நான் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவன் என தெரிவித்து சபையிலிருந்து என்னை வெளியேற்றியது. இது மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமை மீறலாகும். எனக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பாக எனது தரப்பில் பதில் அளிப்பதற்கு எனக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. 

அத்துடன் இந்த உத்தரவு 2 தினங்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுப்பதற்கு அல்லது எனது தரப்பில் வாதிடுவதற்கு எனக்கு அவகாசம் கிடைத்திருக்கும். அவ்வாறு அவகாசம் வழங்காததன் மூலம் எனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானம் நியாயமற்றது. 

எனவே நியாயம் கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளேன். இந்தத் தேர்தலில் என்னுடன் போட்டியிட யாருக்கும் திராணி இல்லாததால்தான் கடைசி நேரத்தில் என்னை நீக்கினார்கள்' என ஜஸ்வர் குறிப்பிட்டார்.

 




Comments