ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்...

 ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்...

மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவுடன் இணைந்து லிப்ட் நிறுவனம் நடாத்தும் ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வும், பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வின் இரண்டாம் கட்ட அங்குரார்ப்பண நிகழ்வு  (18)ம் திகதி கல்லடியில் உள்ள தனியார் விடுதியில்  இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் LIFT நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை பயிற்றுவித்து அவர்கள் மூலமாக இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமாகவே இத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ள ஊடகவியலாளர்களுக்கு முதற்தொகுதியாக 20 பேருக்கான பயிற்சி இடம்பெற்று முடிவடைந்ததனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக  இருபது போரை உள்ளடக்கிய மற்றுமொரு குழுவினருக்கான 3 நாள் பயிற்சி செயலமர்வே இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 60 ஊடகவியலாளர்களுக்கு இப்பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு இருபது ஊடகவியலாளர்களை கொண்ட தொகுதியினருக்கு மிக விரைவில் அவர்களுக்குமான செயலமர்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GCERF மற்றும் HELVETAS நிறுவனங்களின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ள ஊடகவியலாளர்களை பயிற்றுவித்து அவர்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பரப்பப்படும் வன்முறைத்தீவிரவாத எண்ணங்கள், சமூக ஊடகங்களின் பிழையான பயன்பாடுகளை குறைத்தல் போன்றவற்றை முன்னெடுக்கும் திட்டத்தின் ஊடாகவே ஊடகவியலாளர்களுக்கான குறித்த மூன்று நாள் பயிற்சி செயலமர்வு இடம்பெற்று வருகின்றது.

LIFT நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார், மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் கே.ஹரிகரராஜ், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், மட்டக்களப்பு தொழில் நுட்ப கல்லூரியின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் சஞ்ஜெய், மட்டக்களப்பு மாவட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் இணைப்பாளர் யூ.எஸ்.எம்.றிஷ்வி, LIFT நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் வீ.கண்ணன், LIFT நிறுவன உத்தியோகத்தர்கள், மதகு ஊடக நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு வளவாளராக பெண் மனித உரிமை செயற்பாட்டாளரும் பயிற்றுவிப்பாளருமான நளினி ரெட்ணராஜா கலந்து கொண்டு சிறந்த முறையில் வளவாண்மை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













Comments