ஞாயிறு வகுப்பு, இரவு நேர வகுப்புக்கள் வேண்டாம் என வலியுறுத்தும் மாணவர்கள்......

 ஞாயிறு வகுப்பு, இரவு நேர வகுப்புக்கள் வேண்டாம்  என வலியுறுத்தும் மாணவர்கள்......

சிறுவர்கள், மகளிரின் முன்மொழிவைக் கொண்ட சிறந்த பாதீட்டினை உருவாக்கும் நோக்குடன்  மட்டக்களப்பு மாநகரசபை (23) அன்று சிறுவர்கள் மற்றும் மகளிருடன் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

சிறுவர் சிநேக மாநகரமான மட்டக்களப்பு நகரத்தில் பிள்ளைகளின் ஆலோசனைகளைப் பெற்று பாதீடு தயாரிக்கப்படவுள்ளது. இதற்கமைய இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பல முன்மொழிவுகளை முன்வைத்தனர்.

வீதிகள், சிறுவர் பூங்காக்கள், உடற்பயிற்சி நிலையங்கள் என பல தேவைகளை அவர்கள் முன்மொழிந்த போதிலும், அவர்கள் பிரதானமாக வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்திருந்தனர்.

'ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்கள் வேண்டாம்' அத்துடன் இரவு நேரங்களிலும் வகுப்புக்கள் நடத்த வேண்டாம் என்பதே அந்த வேண்டுகோள். இக் கலந்துரையாடலில் பல நகர்புற பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு முன்வைத்த பொதுவான கருத்து ஞாயிறு தினத்திலும், இரவு நேரங்களிலும் வகுப்பு வேண்டாம் என்பதே. இரவு நேரங்களில் வகுப்பு நடத்துவதால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுவதாக பெண் மாணவிகள் குறிப்பிட்டனர்.

மேலும் தற்போதைய காலத்தில் கவனிக்க வேண்டியது மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். அவர்களுக்கு ஓய்வு நேரம் அவசியம். அந்த நேரத்தில் அவர்களை யாராலும் திணிக்கப்படாத விரும்பிய செயலைச் செய்ய விடவேண்டும் என்பதேயாகும்.

அண்மைக்காலமாக நாம் ஒரு விடயயத்தை அவதானிக்கும் போது மாணவர்கள் மத்தியில் தற்கொலை அதிகரிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். முன்னைய காலங்களில் பகுதி நேர வகுப்புக்கள் குறைவாகவும், மாணவர்கள் ஓய்வு அல்லது விளையாடும் நேரம் அதிகமாகவும் இருந்தது. ஆனால் தற்போது மாணவர்கள் ஓய்வு நேரம் என்பது மிகவும் குறைவு, அவர்கள் படிப்புடன் மாத்திரம் சுருங்கி சமூகத்துடன் தொடர்பை குறைத்து சமூகமயமாக்கலில் இருந்து விடுபட்டு விட்டனர். இதனால் உளவியல் பூரணத்துவம் அவர்களுக்கு இல்லாமல் செல்ல சவால்களுக்கு முகம் கொடுப்பது கடினமான காரியமாக மாறிவிட்டது.

இது அனைத்திற்கும் பிரத்தியேக வகுப்புக்கள் மட்டும் காரணம் என  சொல்லவில்லை. இதற்கு பிற காரணங்களும் இருக்கின்றன, இருப்பினும் மாணவர்கள் மத்தியில் பரவலாக விடுக்கப்பட்ட 'ஞாயிறு வகுப்பு தவிர்ப்பு, இரவு நேர வகுப்பு தவிர்ப்பு'  வேண்டுகோள்கள்  நடைமுறைப்படுத்தப்படும் போதும் அதற்கு பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கும் போதும் இதனை நடைமுறைப்படுத்தி எமது எதிர்கால சமூகத்தை சிறந்த முறையில் உருவாக்க முடியும் .







Comments