3 ஆவது எல்.பி.எல். அத்தியாயத்தை முன்னரைவிட சிறப்பாக நடத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஏற்பாடு....

 3 ஆவது எல்.பி.எல். அத்தியாயத்தை முன்னரைவிட சிறப்பாக நடத்த  ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஏற்பாடு....


இலங்கைய்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் பல்வேறு நன்மைகளையும் இலாபங்களையும் ஈட்டிக்கொடுத்த வெற்றிகரமான முதலிரண்டு லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் தொடராக அதனைவிட மிக சிறப்பாக இந்த வருட எல்.பி.எல்.  கிரிக்கெட் போட்டியை நடத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்வந்துள்ளதாக அதன் கௌரவ செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிறீமியர் லீக் மூன்றாவது அத்தியாயம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு எஸ்.எல்.சி. கேட்போர் கூடத்தில்  (17) நடைபெற்ற போது மொஹான் டி சில்வா இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் இன்னும் அதிகமான அனுபவங்களைப் பெறுவதற்கும் அவர்களது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கும் லங்கா பிறீமியர் லீக் சிறந்த வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளது. அத்துடன் வர்த்தக ரீதியிலும் எமக்கு நிறைய பலன்கள், குறிப்பாக பொருளாதார ரீதியாக எமது நாட்டுக்கு நிறைய பலன் கிடைத்துள்ளது' என்றார்.

எல்.பி.எல் போட்டி தொடர்பாக விளக்கிய போட்டி ஏற்பாட்டுக் குழுப் பணிப்பாளர் சமன்த தொடங்வல, இலங்கை கிரிக்கெட் நாட்காட்டியில் மூன்றாவது லங்கா பிறீமியர் லீக் முக்கிய இடம்பிடிக்கவுள்ளது. ஏனெனில் இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்த இந்த வருட லங்கா பிறீமியர் லீக் ஒரு களமாக அமையவுள்ளது. அத்துடன் இப் போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் நிதி ரீதியாகவும் அவர்கள் நிறைந்த பலனைப் பெறுவர் என்றார்.

இந்த வருட லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஹம்பாந்தோட்டை, கண்டி, கொழும்பு ஆகிய மூன்று இடங்களில் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், தம்புள்ள ஜயன்ட்ஸ், கோல் க்ளடியேட்டர்ஸ், கண்டி ஃபெல்கன்ஸ் ஆகிய 5 அணிகள் அதே உரிமையாளர்களுடன் பங்குபற்றும் லங்கா பிறிமியர் லீக்கின் மூன்றாவது அத்தியாயம் ஹம்பாந்தோட்டையில் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் போட்டிகள் கண்டியிலும் கடைசிக் கட்டம் மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் கொழும்பிலும்   நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 23ஆம் திகதி நடைபெறும்.

'2021இல் முதலாவது லங்கா பிறீமியர் லீக் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நடத்தப்பட்டதை அனைவரும் அறிவர். கொவிட் - 19 தொற்று நோய் தாக்கம் காரணமாக முழு உலகமும் முடங்கியிருந்த நிலையில் சவால்களுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் லங்கா பிறீமியர் லீக் போட்டியை வெற்றிகரமாக நடத்தினோம்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எடுத்துக்கொண்ட அயரா முயற்சியும் ஐபிஜி நிறுவனம் வழங்கிய பூரண ஒத்துழைப்பும் அப் போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவின. கடந்த வருடம் இரண்டாவது அத்தியாயத்தையும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீண்டும் வெற்றிகரமாக நடத்தினோம்.


Comments