கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக இடம்பெற்ற மாகாண மட்ட அழகியல் தின போட்டி......

 கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக இடம்பெற்ற  மாகாண மட்ட அழகியல் தின போட்டி......



கிழக்கு மாகாண வரலாற்றில்  முதல் தடவையாக இடம்பெற்ற மாகாண மட்ட அழகியல் தின போட்டியின் பிரதான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று (20) திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் அழகியல் பாடங்களுக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் அவர்களும், மாகாண பிரதிக்கல்விப் பணிணிப்பாளர் (திட்டமிடல்) ஆர்.நிர்மலரஞ்சன் அவர்களும்,  மாகாண கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள், வலயக் கல்விப் பிரதிப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், மகாஜன கல்லூரியின் அதிபர், ஆசிரிய ஆலோசகர்கள், நடுவர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் பண்பாட்டு கலாசார வாத்தியங்கள் இசைத்து அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. 

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில்இ தமிழ்த்தாய் வாழ்த்து,  இறைவணக்கம் என்பன இடம்பெற்று, மாணவர்களின் வரவேற்பு  நடனம், சிறப்பு அதிதிகள் உரை, மேலும் பல மாணவர்களது கண்கவர் ஆற்றுகைகள் என்பவற்றை தொடர்ந்து பிரதம அதிதி உரை இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து அழகியல் தினப் போட்டிகளில் நடுவனம் வகிக்கவுள்ள நடுவர்களுக்கான அறிவுறுத்தலின் பின்னர் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இதன்போது ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர். இக் கிழக்கு மாகாண மட்ட அழகியல்  தின போட்டியில், கோட்ட மட்டங்களில் வெற்றிபெற்று, மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டதுடன், இதில் குழு நடனம், தனி நடனம் மற்றும் குழுப்பாடல், தனிப்பாடல் ஆகிய போட்டிகள் இடம்பெற்று வருகின்றது. 

அதேவேளை நாளையும் (21)ம் திகதி இப்போட்டி நிகழ்வுகள் மகாஜனா கல்லூரியில் இடம்பெறவுள்ளதுடன், சிங்கள மொழி மூல மாணவர்களுக்கான போட்டிகள் எதிர்வரும் 25ம் மற்றும் 26ம் ஆம் திகதிகளில் தெய்யத்தகண்டியிலும், முஸ்லிம் மாணவர்களுக்கான சங்கீத போட்டிகள் எதிர்வரும் 29ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை இம் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியீட்டும் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












Comments