மட்டக்களப்பில் பால் பொருள் உற்பத்திகளின் தொழிற்சாலை திறந்துவைப்பு......

 மட்டக்களப்பில் பால் பொருள் உற்பத்திகளின் தொழிற்சாலை திறந்துவைப்பு......



இலங்கையின் பால்  பொருள் உற்பத்தியில் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை (30)ம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, செங்கலடி பிரதான வீதியில் இந்த பால்பொருள் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் முதலீட்டாளர்களுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பினை சேர்ந்த நடனபாதம் ஜெகதீசன் என்பவர் இந்த தொழிற்சாலையினை மீள ஆரம்பித்துள்ளார்.

இதன் திறப்பு விழா பால் உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையாளர் நடனபாதம் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தேசபந்து மு.செல்வராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சுமார் 20 கோடி ரூபா செலவில் இந்த பால் உற்பத்தி தொழிற்சாலை நவீன வசதிகளைக்கொண்டதாக மீள அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொழிற்சாலையில் தூய பால், சுவையூட்டப்பட்ட பால், ஜோக்கட், தயிர், வெண்ணை, பன்னீர் உட்பட பாலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களிடமிருந்து பால் கொள்வனவு செய்யப்பட்டு இந்த தொழிற்சாலையில் பால் உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் லீற்றர் பால் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் வெளி மாவட்டங்களிலிருந்து அதிகளவான பால் வாங்கப்படுவதனால் போக்குவரத்து செலவுகள் காரணமாக பண்ணையாளர்களிடமிருந்து குறைந்த செலவிலேயே பால் கொள்வனவு செய்யப்படுகின்ற காரணத்தினால், இதுவரை பண்ணையாளர்கள் எதிர்நோக்கிவந்த சந்தைப்படுத்தல் பிரச்சினை இந்த தொழிற்சாலை ஊடாக ஓரளவுக்கு தீர்வுகாணப்படுமென நம்பப்படுகின்றது.

இந்த தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பால் உற்பத்தி பொருட்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கும் சந்தைப்படுத்தவுள்ளதுடன், இலங்கையின் அனைத்து பகுதிக்கும் சந்தைப்படுத்தவுள்ளதாக பால் உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையாளர் நடனபாதம் ஜெகதீசன் தெரிவித்தார். இலங்கையில் உற்பத்திசெய்யப்படும் பால் முறையாக பயன்படுத்தப்படாத காரணத்தினால் வெளிநாட்டு பால் உற்பத்தி பொருட்களை நம்பியிருக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்த நிலைமை மாற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகம் மட்டக்களப்பு சமூகத்துடன் இணைந்து சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்கு அனைத்து பணிகளையும் ஏற்படுத்திவருகின்றது என இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தெரிவித்தார். இதேநேரம் கடந்த காலத்தில் பால்மாவைப்பெற்றுக்கொள்வதில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்ததாகவும் இந்த தொழிற்சாலை ஊடாக எதிர்காலத்தில் மாவட்ட மக்கள் பால் உற்பத்தி பொருட்களை இலகுவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுத்தமைக்கு நன்றி தெரிப்பதாக இதில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.











Comments